தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளபடி, 2026-ம் ஆண்டிற்கான நீட் மறுதேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக வழக்கமான வாரநாட்கள் அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு நடைபெறும் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மாணவர்களின் வசதிக்காக வாரநாட்கள் அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது. மேலும், முக்கிய ரெயில் நிலையங்களில் சிறப்பு நீட் உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தற்போது நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து அரக்கோணம், திருத்தணி வழித்தடத்தில் மட்டும் தற்போது உள்ள அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும். அதேபோல, சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் ஏ.சி.மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயக்கப்படும். இவை தவிர மற்ற அனைத்து வழித்தடங்களிலும் வாரநாட்களுக்கான கால அட்டவணை பின்பற்றப்படும்.