பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் நிலவிவரும் மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. டாடா சன்ஸ் குழுமத் தலைவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க இயக்குநர்கள் வாக்களித்தபோது, வியாழக்கிழமை இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தது.
இதற்கிடையில், அக்குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரர் இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய இந்த வாரியக் கூட்டத்தில், டாடா சன்ஸின் பங்குச்சந்தை பட்டியலிடலுக்கான தயாரிப்புகளுக்கு இயக்குநர்கள் ஒப்புதல் அளித்தனர். இந்த முடிவையும் நோயல் டாடா எதிர்த்தார்.
டாடா டிரஸ்ட்ஸின் தலைவராக நோயல் டாடா உள்ளார். டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில், டாடா டிரஸ்ட்ஸ் சுமார் 66 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. டாடா குழுமத்தின் 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், என். சந்திரசேகரனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வாரியம் முடிவு செய்துள்ள இக்கூட்டத்திற்கு எதிராகச் சட்டப் போராட்டம் வெடிக்கக்கூடும்.
சந்திரசேகரன் தனது திட்டங்களை வியத்தகு முறையில் மாற்றினார்
நோயல் டாடாவுடன் தொடர் மோதல் நிலவி வந்த சூழலில், அவர் பிப்ரவரியில் பதவி விலகத் திட்டமிட்டிருந்தார்.
சந்திரசேகரனின் பதவிக்கால நீட்டிப்புக்கு எதிராக வாக்களித்த ஒரே இயக்குநர் நோயல் டாடா மட்டும்தான். இந்தக் கருத்து வேறுபாடே ஆகஸ்டில் பதவியிலிருந்து விலகுவதற்கான ஒரு காரணமாகச் சந்திரசேகரனால் குறிப்பிடப்பட்டது.
தனது பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து வாரியத்தில் மாதக்கணக்கில் இழுபறி நீடித்த நிலையில், ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தான் மீண்டும் நியமிக்கப்படுவதைப் கோரப் போவதில்லை என்று சந்திரசேகரன் திடீரென அறிவித்தார். ஆனால், நிலைமை திடீரென மாறியது.
டாடா சாம்ராஜ்யம்
பட மூலாதாரம், Getty Images
செமிகண்டக்டர் தயாரிப்பில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய டாடா சன்ஸ் திட்டமிட்டுள்ளது. தாஜ் ஹோட்டல்கள் முதல் தேநீர் வரை பல்வேறு பிராண்டுகள் இந்நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன.
டாடா குழுமத்தின் 32 நிறுவனங்களில், 26 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
13 தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான டாடா டிரஸ்ட்ஸ், டாடா சன்ஸில் தோராயமாக 66 சதவீத பங்குகளைக் கட்டுப்படுத்துகிறது. அதேசமயம் குழும நிறுவனங்கள் சுமார் 13 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன.
மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரரான நோயல் டாடா, டாடா டிரஸ்ட்ஸின் தலைவராக உள்ளார். இவர் அக்டோபர் 2024-ல் ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு இந்தப் பொறுப்பை ஏற்றார். இந்தியாவின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராகப் பணியாற்றியவர் ஆவார்.
நோயல் டாடா தலைமையிலான தொண்டு நிறுவனங்களின் அமைப்பான டாடா டிரஸ்ட்ஸ், சந்திரசேகரனின் பதவிக்கால நீட்டிப்புக்கான வாக்கெடுப்பு செல்லாது என்று உடனடியாக அறிவித்தது.
கூட்டத்தின் போது வாரிய உறுப்பினர் மத்தியில் பேசிய நோயல் டாடா, “தலைவர் பதவி தொடர்பாக இப்போது எடுக்கப்படும் எந்தவொரு முடிவும், அதனை எதிர்க்க விரும்பும் எந்தவொரு பங்குதாரரிடமிருந்தும் கடுமையான சட்ட சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்” என்று தெரிவித்தார்.
பிரிட்டிஷ் நாளிதழான ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில், “கூட்டத்தில் கலந்துகொண்ட நன்கு அறிந்த இருவரின் கூற்றுப்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு இணங்குவதற்கான முடிவை எதிர்த்த ஒரே இயக்குநர் நோயல் டாடாதான். டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோல்டிங் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான விதிகளிலிருந்து விலக்கு கோரி டாடா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த வாரம் ரிசர்வ் வங்கி நிராகரித்திருந்தது.
நோயல் டாடா எதிர்ப்பு
பட மூலாதாரம், Getty Images
ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால், அதன் மதிப்பு 120 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அவ்வாறு நடந்தால், அது இந்தியாவின் மிகப்பெரிய ஆரம்பப் பங்கு வெளியீடாக (IPO) இருக்கும். இதன் மூலம், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சிலரது கட்டுப்பாட்டில் இருந்து வரும் டாடா குழுமத்தின் உரிமை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க நிறுவனத்தின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, “நிர்வாகக் குழுவின் முடிவுகள் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படலாம் என்று டாடா குழுமத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“நிறுவனத்தின் விதிகளின்படி, எந்தவொரு முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய முன்மொழிவுக்கும், தொண்டு அறக்கட்டளைகளால் பரிந்துரைக்கப்படும் இயக்குநர்களில் பெரும்பான்மையானோரின் ஒப்புதல் தேவை. ஆனால், தற்போது டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் அந்த அறக்கட்டளைகளால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் நோயல் டாடா மற்றும் வேணு சீனிவாசன். வியாழக்கிழமை முன்வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு சீனிவாசன், மற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து ஆதரவாக வாக்களித்தார்” என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா டிரஸ்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், சந்திரசேகரனை மீண்டும் டாடா சன்ஸ் குழும தலைவராக நியமிப்பதற்கான முன்மொழிவு, டாடா சன்ஸ் நிறுவனத்தின் சங்க விதிகளுக்கு (Articles of Association) உட்பட்டதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நிர்வாகக் குழுவில் இருந்த ஆறு இயக்குநர்களில் நான்கு பேர் அந்த முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நோயல் டாடா எதிராக வாக்களித்தார். சந்திரசேகரன் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தார்.
டாடா டிரஸ்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. செப்டம்பர் 11, 2026 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் கடிதம் குறித்து இன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
“பங்குச்சந்தையில் பட்டியலிடுவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், வேறு வழிகளையும் பரிசீலிக்க வேண்டும் என்று நிர்வாகக் குழு ஒப்புக்கொண்டது. டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது தொடர்பாக அதன் நிர்வாகக் குழு ஏற்கெனவே பரிசீலித்திருந்தது. மறைந்த ரத்தன் டாடாவின் வழிகாட்டுதலின்படி, 2024 மார்ச் மாதத்தில் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமல் தொடர வேண்டும் என்று நிர்வாகக் குழு ஒருமனதாக முடிவு செய்தது.
“2025 ஜூலை மாதத்திலும், சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகிய இரு அறக்கட்டளைகளும் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமல் தொடர வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானங்களை நிறைவேற்றின.
“இது உணர்வுப்பூர்வமான விஷயம் அல்ல. இந்தக் குழுமம் செயல்படும் விதமும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அது நிலைத்திருப்பதற்கான காரணமும் இதுதான். பங்குச்சந்தையில் பட்டியலிடுவது டாடா குழுமத்தின் தனித்துவமான இயல்பை அழித்து, இந்தக் கொள்கையின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்தின் கௌரவத் தலைவரான சீனிவாசன், சந்திரசேகரனின் பதவிக்காலத்தை நீட்டிப்பதை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார்; அத்துடன், டாடா சன்ஸ் (Tata Sons) நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை ஆதரிப்பதாகவும் அவர் இந்த ஆண்டு பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
நடராஜன் சந்திரசேகரன் என்பவர் யார்?
பட மூலாதாரம், Getty Images
டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லாமல் டாடா சன்ஸ் நிறுவனத்திற்குத் தலைமை தாங்கும் முதல் நபர் சந்திரசேகரன் ஆவார். இப்பதவிக்காக அவர் ரத்தன் டாடாவால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரி உட்பட மொத்தம் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இந்த ஐடி பெருநிறுவனத்தை இந்தியாவின் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை சந்திரசேகரனைச் சாரும். அவர் ஒரு தொழில்நுட்ப வல்லுநராகவும், நம்பிக்கைக்குரிய தலைவராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஐஃபோன் தயாரிப்பு மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் டாடா குழுமத்தை முன்னோக்கி அழைத்துச் சென்றதே கடந்த பத்தாண்டுகளில் சந்திரசேகரனின் மிகப்பெரிய வெற்றியாகும் என்று அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, “மார்ச் 2017-ல் முடிவடைந்த நிதியாண்டில் 6 லட்சம் கோடியாக இருந்த டாடா குழுமத்தின் மிகப்பெரிய 15 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய், அவரது பதவிக்காலத்தில் மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதாவது 12.3 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் டாடா நிறுவனங்களின் லாபமும் 360 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து ரூ. 1.66 லட்சம் கோடியை எட்டியது.”
கடந்த ஆண்டில் தனது வணிகத்தைச் லாபகரமாக மாற்றுவதற்கான அழுத்தங்களை சந்திரசேகரன் எதிர்கொண்டுள்ளார். ஏர் இந்தியா விமான விபத்து, பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் (GDP) பாதித்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதல் மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் வணிகத்திற்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள வளர்ந்து வரும் அச்சுறுத்தல் போன்ற சவால்களைக் குழுமம் எதிர்கொண்டது. இந்தியாவின் முதல் உள்நாட்டு செமிகண்டக்டர் சிப்பை உருவாக்கும் தனது லட்சியத் திட்டங்களில் ஒன்றை நிறைவேற்ற வேண்டிய அழுத்தத்திலும் அவர் இருந்தார்.
தமது பதவிக்காலம் பிப்ரவரியில் முடிவடைந்த பிறகு டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சந்திரசேகரன் கடந்த ஆகஸ்ட் 12 அன்று அறிவித்தார். அவரது பதவிக்கால நீட்டிப்பு குறித்த மாதக்கணக்கிலான இழுபறிக்குப் பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது.
நோயல் டாடா தொடர்பான சர்ச்சைகள்
பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு நவம்பரில் டாடா குடும்ப மோதல் குறித்து ‘நிக்கி ஏசியா’ ஊடகம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பிற்குள்ளேயே நோயல் டாடாவிற்கு எதிராகக் குரல்கள் எழுந்து வருவதாக அந்தச் செய்தி குறிப்பிட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் நோயல் டாடாவிற்கு அனுப்பிய செய்தியில், டாடா டிரஸ்ட்ஸ் வாரிய உறுப்பினர் மெஹ்லி மிஸ்திரி அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவசரப்பட்டு சில முடிவுகளை எடுப்பது டாடா குழுமத்திற்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
நிக்கி ஏசியா தனது செய்தியில், “நோயல், டாடா சன்ஸ் வாரிய உறுப்பினர் ஒருவரை மீண்டும் நியமிக்கச் செய்த பரிந்துரையை மிஸ்திரியும் மற்றும் பல வாரிய உறுப்பினர்களும் நிராகரித்தபோது மிஸ்திரி வெளியேற்றப்பட்டார். மிஸ்திரியே ஒரு இயக்குநராக மாற விரும்பினார், ஆனால் நோயல் டாடா அதைத் தடுத்ததாகத் தெரிகிறது” என்று எழுதியுள்ளது.
டாடா குழுமத்திற்குள் தொடர்ந்து கொண்டிருக்கும் கொந்தளிப்பைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாததால், மத்திய அரசு இதில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிற அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் நோயல் டாடா மற்றும் குழுமத்தின் பிற மூத்த அதிகாரிகளைச் சந்தித்து விரைவான தீர்வை எட்டுமாறு வலியுறுத்தினர்.
டாடா குழுமம் குறித்து ஆய்வு செய்யும் டோக்கியோ தாகுஷோகு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எமரிட்டஸ் மகோடோ கோஜிமா நிக்கி ஏசியாவிடம் கூறுகையில், “குழுமம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால், லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட சந்தை அழுத்தங்கள் ஊக்குவிக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுவில் பட்டியலிடப்படும் பட்சத்தில் மேலாண்மை தத்துவத்தையும் நெறிமுறைகளையும் சமரசம் செய்வது கடினமாக இருக்கலாம்” என்றார்.
டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடாவிற்கு எழுதிய கடிதத்தில், ரத்தன் டாடாவின் நெருங்கிய கூட்டாளியான மெஹ்லி மிஸ்திரி, “ரத்தன் என் டாடாவின் பார்வைக்கான எனது உறுதியானது, டாடா டிரஸ்ட்ஸ் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்குவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான பொறுப்பையும் உள்ளடக்கியது” என்று குறிப்பிட்டிருந்தார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதை நோயல் டாடா ஏன் எதிர்க்கிறார்?
பரஸ்பர போட்டி மற்றும் ஒழுங்குமுறை குழப்பம் காரணமாக, டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிடுவதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த எவ்வித நியாயமான வணிக மதிப்பீடும் மங்கலாகியுள்ளதாக ப்ளூம்பெர்க் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
ஒருமுறை பட்டியலிடப்பட்டால், நிறுவனம் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். புதிய வணிகங்களுக்கான நிதி திரட்டும் வாய்ப்புகள் விரிவடையலாம். மேலும், பெரிய மற்றும் புகழ்பெற்ற உலகளாவிய முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மும்பையைச் சார்ந்த நிறுவன ஆளுகை ஆலோசனை நிறுவனமான IiAS-ன் தலைவர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியான ஹேதல் தலால் ப்ளூம்பெர்க்கிடம் கூறுகையில், “ஏர் இந்தியா நிறுவனத்தைக் வாங்குவது மற்றும் செமிகண்டக்டர் வசதிக்கான முதலீடு போன்ற ஒப்பந்தங்களுக்குப் பொதுப் பங்குதாரர்களின் குழு ஆதரவு அளித்திருக்காது. டாடா சன்ஸ் பட்டியலிடப்படுவது குறித்த விவாதம் எந்தவொரு உறுதியான நன்மைகளையும் விட, ஒழுங்குமுறை நெறிமுறைகளால் தூண்டப்படுகிறது” என்றார்.
இந்தியாவின் பிற தொண்டு அறக்கட்டளைகளைப் போலன்றி, டாடா டிரஸ்ட்ஸ் தனது டாடா சன்ஸ் பங்குகள் மீது வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கும் சலுகையைக் கொண்டுள்ளது. இந்த உரிமையை ரத்து செய்வது அவ்வளவு எளிதானது அல்ல.
இந்த அனைத்து பலவீனங்களையும் தாண்டி, 10 ஆண்டுகளுக்கு முன்பு டாடா குழுமத்தில் ஏற்பட்ட விரிசல்கள் இப்போது மேலும் ஆழமாகி வருவதாக ப்ளூம்பெர்க் எழுதியுள்ளது.
குழுவைக் கட்டுப்படுத்தும் தொண்டு அறக்கட்டளைகளின் தலைவரும், நிறுவனக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான நோயல் டாடாவிற்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடுதல் ஒரு பெரிய அடியாக இருக்கும் என்று ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மேலாண்மை கழகத்தின் வருகைப் பேராசிரியரும், டாடா குழுமத்தின் முன்னாள் அதிகாரியுமான நிர்மல்யா குமார் எஃப்டியிடம் கூறுகையில், “அரசாங்கத்தின் மறைமுக மற்றும் முறைசாரா ஒப்புதல் இல்லாமல் ரிசர்வ் வங்கியால் இவ்வளவு பெரிய முடிவை எடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
பட்டியலிடுவதா இல்லையா என்பது குறித்த கருத்து வேறுபாடுகளே இந்த ஆண்டு வாரிய அறையில் ஏற்பட்ட சர்ச்சைக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. நீண்ட காலமாகப் பணியாற்றிய டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தனது பதவிக்காலம் முடிந்தவுடன் விலகுவதாக அறிவித்தபோது இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.
டாடா சன்ஸுக்கு நெருக்கமான ஒரு நபர் ஃபைனான்சியல் டைம்ஸ் இதழிடம் கூறுகையில், “பொதுவெளியில் வர விரும்பாத ஒரு நிறுவனத்தை அவ்வாறு செய்யும்படி அரசு கட்டாயப்படுத்துகிறது. இந்தச் செயல்முறைக்கு அருகில் உள்ள ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை வெளிநாட்டு முதலீட்டைச் கடுமையாகப் பாதிக்கும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு