நடந்து முடிந்த 2026 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிம் டேவிட், மூன்றாவது முறையாக ஐபிஎல் நடத்தை விதிகளை மீறினார்.
ஏப்ரல் 13 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், நடுவரின் அறிவுறுத்தலுக்கு கீழ்படியாமை தொடர்பான விதி 2.4-ஐ மீறியதற்காக, போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமும் ஒரு தகுதிக்குறைப்பு புள்ளியும் டிம் டேவிட்டிற்கு விதிக்கப்பட்டது.
இதையடுத்து மே 11 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு, ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியது தொடர்பான விதி 2.6-ஐ மீறியதற்காக இரண்டு தகுதிக் குறைப்பு புள்ளிகளுடன், போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அகமதாபாத்தில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 10வது ஓவரின் நடுவே, களத்தில் நின்ற நடுவர் நிதின் மேனன்னை நோக்கி ஆக்ரோஷமாக ஐஸ் பேக்கை வீசினார்.
இதில் ஐபிஎல் நடத்தை விதிகளின் 2.9வது பிரிவை மீறியதாக குற்றம்சாட்டபட்டு, இரண்டு தகுதிக் குறைப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டது. இதையடுத்து போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் விதித்த தண்டனையையும் டிம் டேவிட் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் ஐந்து தகுதிக்குறைப்பு புள்ளிகளைப் பெற்ற டிம் டேவிட்டிற்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.