பட மூலாதாரம், ANI
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இந்தியத் தலைநகர் டெல்லியில் மாணவர்கள் தங்கியிருந்த பி.ஜி. விடுதி அமைந்திருந்த ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தபோது, அதற்குள் சுமார் 50 பேர் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
டெல்லி கூடுதல் காவல் துணை ஆணையர் அபிமன்யு போஸ்வால் செய்தியாளர்களிடம், “இதுவரை 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “கட்டடத்தின் உரிமையாளர் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம். எங்களிடம் அனைத்து தகவல்களும் உள்ளன. அவர் விரைவில் கைது செய்யப்படுவார்.” என்றார்.
டெல்லி பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள ‘ஹாஸ்டல் டேஸ்’ என்ற அந்தக் கட்டடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.