அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர்மந்தரில் திரண்டுள்ள இளைஞர்களுடன் போராட்டத்தில் இணைந்துள்ளார். ஜந்தர் மந்தரில் அவர், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பினார்.
அத்துடன் அபிஜித் தீப்கே, “கடந்த 5-10 நாட்களாக, சமூக ஊடகங்களில் ஒரு பக்கத்தை (page) நடத்துவதால் என்ன பயன் என்று மக்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். கேமராவைத் திருப்பி, வீடுகளிலிருந்து எத்தனை கரப்பான் பூச்சிகள் வெளியே வந்துள்ளன என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்,” என்று கூறினார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP), மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இப்போராட்டத்தை “அன்புடனும் அமைதியுடனும் முன்னெடுத்துச் செல்லுமாறு” அக்கட்சி தனது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய உடனேயே, “கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்று அபிஜித் தீப்கே வலியுறுத்தியிருந்தார்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த காக்ரோஜ் ஜனதா கட்சி நிறுவனர்
ஜந்தர்மந்தரில் என்ன நடக்கிறது?
லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இருப்பினும், சிஜேபி தனது எக்ஸ் பக்கத்தில் அபிஜீத் திப்கே விமான நிலையத்திலிருந்து வெளியேறி காரில் செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்தப் புகைப்படத்தில் திப்கே, பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தையும் கையில் வைத்திருப்பது தெரிகிறது.
இதற்கிடையில், ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அங்கே இளைஞர்கள் கூட்டமும் காணப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கருதப்படுகிறது.
ஜந்தர் மந்தரில் ஏராளமான ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் காணப்படுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லி விமான நிலையத்தை அடைந்த பிறகு அபிஜீத் தீப்கே
ஜந்தர்மந்தரில் மேடை அமைக்க காவல்துறையினர் அனுமதி கொடுத்திருப்பதால் சிஜேபி கட்சியினர் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிஜேபி போராட்டம் நடக்கும் ஜந்தர் மந்தரில் சுமார் 700 சிஆர்பிஎஃப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அங்கே, போராட்டக் களத்தை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளுக்கு வெளியே பாஜக ஆதரவாளர்கள் திரண்டு சிஜேபிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.
இந்தச் சூழலில், ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) என்ற நகைச்சுவையான சமூக ஊடகப் பிரசாரம், இணைய உலகிலிருந்து நிஜ உலகில் தெருக்களுக்கு வருகிறது.
முன்னதாக, சி.ஜே.பி தனது எக்ஸ் பக்கமான ‘காக்ரோச் இஸ் பேக்’ என்பதில், “ஜூன் 6, காலை 9 மணி – நாளை சந்திப்போம், சக கரப்பான் பூச்சிகளே. நாம் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைப் பெறுவோம். ஒரு சிறிய நகைச்சுவையை ஒரு இயக்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று பதிவிட்டிருந்தது.
ஆனால், ஒரு நகைச்சுவையாகத் தொடங்கி, பின்னர் ஒரு மீம் ஆக மாறிய இந்த சமூக ஊடகப் பிரசாரத்தை எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்?
சனிக்கிழமை டெல்லியில் கூடும் மக்களின் எண்ணிக்கை பல விஷயங்களைத் தீர்மானிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்பினாலும், சி.ஜே.பி.யின் வருகையை ஒதுக்கிவிட முடியாது என்பது நிச்சயம்.
படக்குறிப்பு, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஏராளமான இளைஞர்கள் கூடியுள்ளனர்.
‘மூவர்ணக் கொடி, புத்தகம் மற்றும் பூக்களை கொண்டு வாருங்கள்’
காக்ரோச் ஜனதா பார்ட்டியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே இன்று (ஜூன் 6) காலையில் இந்தியா வந்தார்.
முன்னதாக, அவரது பயணத் திட்டங்களை விவரிக்கும் காணொளி ஒன்று, சிஜேபியின் எக்ஸ் பக்கமான “காக்ரோச் இஸ் பேக் ” எனும் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் சிஜேபி செய்தித் தொடர்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் காணப்படுகின்றனர். அந்தக் காணொளியில் சௌரவ் தாஸ், “அபிஜித் தீப்கே காலை 8 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை வந்தடைவார். அங்கிருந்து, அவர் மற்றப் பணியாளர்களுடன் பாராளுமன்றத் தெரு காவல் நிலையத்திற்குச் செல்வார். நீங்கள் அனைவரும் அங்கு வந்து சேருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்” என்று கூறினார்.
போராட்டத்திற்கு காவல்துறையின் ஒத்துழைப்பும் அனுமதியும் கோரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அமைதியைக் கடைப்பிடித்து, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துமாறு காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்களுக்கு சௌரவ் தாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
மூவர்ணக் கொடி, புத்தகங்கள், மலர்கள் ஆகியவற்றைத் தங்களுடன் கொண்டு வருமாறும், தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்து வருமாறும் ஆதரவாளர்களிடம் அஷுதோஷ் ரங்கா வேண்டுகோள் விடுத்தார்.
‘தர்மந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்து, ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்’ என அவர் பிரதமர் நரேந்திர மோதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் வரவேற்கப்படுகிறார்கள் என்று சௌரவ் தாஸ் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், @Cockroachisback
படக்குறிப்பு, அபிஜித் தீப்கே டெல்லி சென்றடைந்த பிறகு, சி.ஜே.பி இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது .
காக்ரோச் ஜனதா பார்ட்டியின் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான அபிஜீத் திப்கே, பிபிசி நியூஸ் மராத்திக்கு அளித்த பேட்டியில், தான் ஏன் சிஜேபி-யைத் தொடங்கினேன் என்பது குறித்துக் கூறினார்.
“அமைப்பை விமர்சிப்பதற்கும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் நாட்டின் இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் ஒப்பிட்டு, இந்தியத் தலைமை நீதிபதி வெளியிட்ட அறிக்கையை நான் எக்ஸ் தளத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று அவர் கூறியிருந்தார்.
“இது எனக்கு மிகவும் அபத்தமாகத் தோன்றியது, ஏனென்றால் தலைமை நீதிபதிதான் நாட்டின் அரசியலமைப்பின் பாதுகாவலராக இருக்க வேண்டும்; அந்த அரசியலமைப்புதான் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரத்தை வழங்குகிறது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒருவர், இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் எப்படி ஒப்பிட முடியும்?”
“இது எனக்கு கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியது, இதுகுறித்த எனது கருத்தை நான் எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்தினேன். எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் என்று நான் கேட்டேன். நாம் ஒன்றிணைந்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிய ஜென் ஸி மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து எனக்கு அற்புதமான பதில்கள் கிடைத்தன”என்று தீபக் கூறினார்.
பட மூலாதாரம், X/Cockroachisback
“இது, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற பெயரில் இணையத்தில் ஒரு நகைச்சுவையான இயக்கத்தை நாம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குத் தந்தது. நீங்கள் எங்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைத்தால், சரி, காக்ரோச் ஜனதா பார்ட்டியை உருவாக்குவோம் என நான் நினைத்தேன். இந்தக் கட்சியில் சேர்வதற்கான நிபந்தனைகளை நான் நிர்ணயித்துள்ளேன். தலைமை நீதிபதி கூறியது போல் நீங்கள் சோம்பேறியாக இருக்க வேண்டும், வேலையில்லாமல் இருக்க வேண்டும், மேலும் அவர் கூறியது போல் நீங்கள் தொடர்ந்து இணையத்தில் இருக்க வேண்டும்.”
இந்த நையாண்டிப் பிரசாரம் எப்படிப் பிரபலமானது என்பது குறித்துப் பேசிய தீபக், “இதற்குப் பிறகு, இது பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும், இனி இது வெறும் நகைச்சுவை அல்ல என்றும் நாங்கள் உணரத் தொடங்கினோம். ஏனென்றால், மக்கள் விரக்தியடைந்துள்ளனர். அதனால் நாங்கள் ஒரு இணையதளத்தையும், கட்சியின் தேர்தல் அறிக்கையையும் உருவாக்கினோம்,” என்றார்.
மேலும், “இன்ஸ்டாகிராமில் எங்களை இரண்டு மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். (தற்போது 22.1 மில்லியன் அல்லது 2 கோடியே 21 லட்சத்திற்கும் அதிகமானோர்). இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் காக்ரோச் ஜனதா பார்ட்டியில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளனர். நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திய அரசியலில் இது ஒரு முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும்” என்று அவர் கூறினார்.