1
‘ட்ரெயின் படத்தை விஜய் சேதுபதியை தவிர வேற யாராலும் நடித்திருக்க முடியாது. கமல்ஹாசனால் கூட நடித்திருக்க முடியாது’ என :ட்ரெயின்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள’ ட்ரெயின்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி , சுருதிஹாசன், நாசர், கே. எஸ். ரவிக்குமார், சம்பத்ராஜ், நரேன், கலையரசன் என அறுபதிற்கும் மேற்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு மிஷ்கின் இசையமைத்திருக்கிறார். புகையிரத பயணத்தின் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பங்கு பற்றி தயாரிப்பாளர் எஸ் தாணு பேசுகையில், ” பொதுவாக நான் தயாரிக்கும் படத்தின் கதைகளை கேட்பதுண்டு. ஆனால் இந்தப் படத்தின் கதையை நான் கேட்கவில்லை. மேலும் இந்த திரைப்படம் காலதாமதமானதற்கு நான் காரணம் இல்லை” என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ” தயாரிப்பாளர் தாணுவை சந்தித்து கதை சொன்னேன். அவர் விஜய் சேதுபதி உடன் இணைந்து பணியாற்றலாம் என்று சொன்னார். அதன் பிறகு விஜய் சேதுபதிக்காக இப்படத்தை செதுக்க தொடங்கினேன். இந்த திரைப்படத்தை விஜய் சேதுபதியை தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது. கமல்ஹாசனால் கூட நடித்திருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. இந்தத் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என்றார்.