காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக போதிய அளவு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் நீர் இறைப்பான்கள் மூலம் நிலத்தடி நீரை பாய்ச்ச முடியாததால், வயல்வெளிகள் பாலம் பாலமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. நெற்பயிர்களும் கருகத் தொடங்கியுள்ளன. உடனடியாக தண்ணீர் பாய்ச்சப்படவில்லை என்றால் அரும்பாடு பட்டு வளர்த்த பயிர்கள் கருகி விடும் என்ற கவலையில் விவசாயிகள் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
விதை, நடவு, உரம், களையெடுத்தல் ஆகியவற்றுக்காக மட்டும் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை உழவர்கள் செலவழித்துள்ளனர். இத்தகைய சூழலில் நன்றாக வளர்த்தெடுக்கப்பட்ட நெற்பயிர்களை காப்பாற்றாவிட்டால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். பயிர்களைக் காப்பாற்ற தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தவிர அரசிடம் உழவர்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. உழவர்களின் எதிர்பார்ப்பு அரசால் நிறைவேற்ற முடியாதும் இல்லை.
எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு நாளைக்கு குறைந்தது 18 மணி நேரமாவது தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், வழக்கமாக வழங்கப்படும் குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 இடுபொருள் மானியம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.