17
தமிழகத்தில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் திகதி, தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய் மற்றும் அவருடன் இணைந்து பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கு இன்று தங்களது பொறுப்புத் துறைகள் வழங்கப்பட்டன.
முதல்வர் விஜய் தனது வசம் பல முக்கிய துறைகளை வைத்திருக்கிறார். பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்புத் திட்டச் செயலாக்கம் போன்ற நிர்வாகத் துறைகளும் முதல்வரின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற மக்கள் நலத்துடன் தொடர்புடைய முக்கிய துறைகளும் முதல்வர் விஜய்யின் வசமே ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு மாநிலத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகக் கருதப்படும் நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஓய்வூதியத் துறையும் வழங்கப்பட்டுள்ளதால், அரசின் வருவாய் மற்றும் செலவின மேலாண்மையில் அவர் முக்கிய பங்காற்றவுள்ளார்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன் சுமை தொடர்பான திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித் துறை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் தொடர்பான பொறுப்புகள் அவரிடம் இருக்கும். இதனுடன் விளையாட்டுத் துறையும் இணைக்கப்பட்டுள்ளதால், அடிக்கட்டு வசதிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டில் அவர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் அருண் ராஜுக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பேற்கிறார்.
அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு உணவு, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு தொடர்பான துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மற்றும் விலை நிலைத்தன்மையை பேணும் பொறுப்பு இவரது அமைச்சகத்தின் கீழ் செயல்படும்.
அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, நீதிமன்றங்கள், சிறைகள், ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை, ஆளுநர் அலுவல்கள், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான நிர்வாகப் பொறுப்புகளும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் தொல்லியல், தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் அச்சுத்தாள் கட்டுப்பாடு, அரசு அச்சகம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் டி.கே. பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் கனிம வள மேலாண்மை மற்றும் சுரங்கத் திட்டங்கள் இவரது பொறுப்பில் இருக்கும்.
அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்த்தல், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற முக்கிய பணிகளை அவர் முன்னெடுக்கவுள்ளார்.
புதிய அமைச்சரவைக்கான துறை ஒதுக்கீடுகள் வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு அமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் அரசின் எதிர்கால நிர்வாக திசையை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.