13
இலண்டனில் இன்று சனிக்கிழமை (16) “யுனைட் தி கிங்டம்” (Unite the Kingdom) என்ற பெயரிலான வலதுசாரிப் பேரணி மற்றும் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி என இருவேறு மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெறுகின்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்த போராட்டங்களால் இலண்டன் மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க 4,000-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க sterile zone எனப்படும் பாதுகாப்பான இடைவெளி உருவாக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புப் பணிக்காக முதன்முறையாக நேரடி முக அடையாள அங்கீகாரக் கேமராக்கள் (Live facial recognition cameras), ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
டொமி ராபின்சன் (Tommy Robinson) என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள், தற்போதைய அரசுக்கு எதிராகவும், வெள்ளை இன உழைக்கும் வர்க்க மக்கள் பாகுபடுத்தப்படுவதாகவும் கூறி முழக்கமிட்டனர்.
பாலஸ்தீன ஆதரவுப் பேரணி
1948இல் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட “நக்பா தினத்தை” (Nakba Day) முன்னிட்டு இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் இனப்படுகொலைக்கு எதிராகவும், பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்.
இலண்டனில் இன்று மதியம் வரை சுமார் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வன்முறையைத் தூண்டக்கூடும் எனக் கருதப்பட்ட 11 வெளிநாட்டு வலதுசாரித் தலைவர்கள் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்தி – இலண்டனில் நாளை ஆர்ப்பாட்டங்கள்: தீவிர வலதுசாரிகள் 11 பேருக்கு இங்கிலாந்துக்குள் நுழையத் தடை!
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், வெறுப்புணர்வையும் பிரிவினையையும் பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், போராட்டம் நடத்துவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்றாலும், வன்முறை சகித்துக்கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளார்.
இதே நாளில் வெம்பிளி மைதானத்தில் எஃப்.ஏ கோப்பை (FA Cup) இறுதிப் போட்டி நடைபெறுவதால், போக்குவரத்து மாற்றங்களும் கூடுதல் பாதுகாப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
