பட மூலாதாரம், CVShanmugamofl/X
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அதிமுகவில் ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் பேசி வருகிறார்.
“அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறது. அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள், எம்எல்ஏக்கள் உள்ளோம். தவெகவுக்கு குறிப்பாக முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவர் முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அந்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்.” என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், “தேர்தலுக்கு பிறகு கலந்தாலோசித்தபோது அதிமுகவின் பொதுச் செயலாளர் சில முன்மொழிவுகளை எங்களிடம் வைத்தார். திமுகவை எதிர்த்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறோம். இந்த நிலையில், நாங்கள் எதிர்த்த ‘திமுகவின் ஆதரவுடன் அதிமுக என்னை முதலமைச்சராக்க ஒப்புக்கொண்டுள்ளனர், அதனை நாம், ஒப்புக்கொள்ள வேண்டும்’ என அவர் சொன்னபோது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.” என்றார்.
அதிமுகவில் என்ன நடக்கிறது?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் இன்னமும் தேர்வாகவில்லை. இது அதிமுகவில் பிளவை குறிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.