4
திருக்கோணேஸ்வரர் ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாகவும் இத் திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர் ஜெயசங்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், திருக்கோணேஸ்வர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் முதலாவது அங்கத்தவராக நான் இருக்கின்றேன். ஆலயத்திற்கு 40 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றேன்.
திருக்கோணஸ்வர ஆலயமானது 247 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இதற்கு பிரித்தானியர் ஆட்சியில் வழங்கப்பட்ட சி.வி 217 என்ற இலக்கம் கொண்ட செம்பு உறுதி இந்தியாவில் உள்ள ஆதீனம் ஒன்றில் இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றது.
படைகளால் ஆக்கிரமிப்பு
இந்தநிலையில் ஆலய பகுதிகள் ஒவ்வொரு படையாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
திருக்கோணேஸ்வர ஆலய வாசலில் முதலாவதாக கேணி இருந்த இடத்தை மூடி இலங்கை இராணுவமும் அதனைத் தொடர்ந்து மத்தியில் காவல்துறை தலைமையகமும் அதனைத் தொடர்ந்து நந்தி மலையில் கடற்படைத் தளமும் அமைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க விமானப்படைத் தளத்திற்கும் இடத்தைக் கொடுத்தால் எமது நிலம் எங்கே என்று சிந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம். இதனால் கோணேசரின் இருப்பிடம் மட்டுமல்லாமல் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
ரேடார் கருவியை சீனக்குடா பகுதியிலேயே அமைக்க முடியும் அதைவிடுத்து இங்கே அமைப்பதன் நோக்கம் என்ன என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. எனவே அனைத்து திருகோணமலை மக்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நில அபகரிப்பை தடுக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.