கடந்த 2021-ஆம் ஆண்டு கொழும்பு நெலும் பொக்குண திரையரங்கில் நடைபெற்ற ‘திருமதி இலங்கை அழகு ராணிப் போட்டியின் போது, வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தைப் பலவந்தமாகப் பறித்து, அவரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளான கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரா ஆகியோரை விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரஹம இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பிரதிவாதிகளுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை எனத் தலைமை நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் விசாரணை முடிவுகள் அறிவிக்கப்படும் அதேவேளையில், வழக்கில் தொடர்புடைய இரண்டாம் பிரதிவாதியான சூலா பத்மேந்திரா ஏற்கனவே காலமான செய்தியும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற திருமதி இலங்கை அழகு ராணி இறுதிப்போட்டியில் வெற்றியாளராக புஷ்பிகா டி சில்வா அறிவிக்கப்பட்டார். அப்போது மேடைக்கு வந்த முன்னாள் திருமதி உலக அழகி கரோலின் ஜூரி, புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் எனக் கூறி அவரது தலையிலிருந்த கிரீடத்தைப் பலவந்தமாகக் கழற்றி இரண்டாம் இடம் பிடித்தவருக்குச் சூட்டினார். இதனால் ஏற்பட்ட மோதலில் புஷ்பிகாவிற்குப் காயம் ஏற்பட்டதாகக் கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டு, இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
The post திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை appeared first on Vanakkam London.