• Thu. Aug 27th, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ளம்: காணாமல் போன 13, 14 வயது சிறுவர்கள் உட்பட 33 இங்கிலாந்து பிரஜைகளின் மீட்புப் பணியில் தொய்வு!

Byadmin

Aug 27, 2026


நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப் பெருக்கில், 13 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுவன் உட்பட 33 இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர். இந்தக் கோர இயற்கைச் சீற்றத்தில் இதுவரை 270 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

644 சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பில்லை நேபாள தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, அப்பகுதியில் மொத்தம் 826 பேர் மாயமாகியுள்ளனர். 644 சுற்றுலாப் பயணிகள் தற்பொழுது தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளத்தில் சுற்றுலா வழிகாட்டி சேவைகளை வழங்கும் ‘ஆல்பைன் ஈகோ ட்ரெக்’ (Alpine Eco Trek) நிறுவனம், கைலாஷ் மலைக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்ற தங்களின் குழுவில் இருந்த 12 இங்கிலாந்து பிரஜைகளுடன் தொடர்பை இழந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

புதன்கிழமை காலை 8:40 மணியளவில் திபெத்தின் குடிவரவு அலுவலகத்துக்கு அருகில் இருந்தபோது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 13 வயதுச் சிறுமியும் அடங்குவார்.

மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்களை இயக்க முடியவில்லை என்றும், இவர்களுடன் சென்ற 4 நேபாள வழிகாட்டிகளும் மாயமாகியுள்ளனர் என்றும் அந்நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

இதேபோல், ‘ட்ரெக்கர்ஸ் சொசைட்டி’ (Trekkers’ Society) மூலம் கைலாஷ் யாத்திரை சென்ற 14 முதல் 50 வயதுடைய 4 ஆண்களும், 40 முதல் 53 வயதுடைய 5 பெண்களும் என 9 இங்கிலாந்து பிரஜைகள் சீன எல்லைப் பகுதியில் மாயமாகியுள்ளனர்.

மேலும், ‘இமாலயன் கிளேசியர் யூஎஸ்’ (Himalayan Glacier US) குழுவில் 2 இங்கிலாந்து பிரஜைகளும், ‘கைலாஷ் ஜர்னிஸ்’ (Kailash Journeys) குழுவில் 2 இங்கிலாந்து பிரஜைகளும், ‘ஃபிஷ்டெயில் டூர்ஸ்’ (Fishtail Tours) மூலம் சென்ற ஒரு இங்கிலாந்து பிரஜையும் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எட் மிலிபான்ட் (Ed Miliband) நேபாள வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் பேசி, நேபாளத்துக்குத் தேவையான நிதி மற்றும் தேடுதல்-மீட்புப் பணிகளுக்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

தாங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அங்குள்ள இங்கிலாந்து குடிமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) கூறியுள்ளார்.

அத்துடன், அங்குள்ள இங்கிலாந்து பிரஜைகள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும், பயண வழிகாட்டுதல்களையும் உன்னிப்பாகக் கவனித்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மீட்புப் பணி

By admin