‘காப்புரிமை சட்டத்தின்படி, இசைப் படைப்பு என்பது பாடலில் இசை மற்றும் மெட்டுகளைக் குறிக்கும். அதில் வரும் வரிகளையோ ஒலிப்பதிவையோ இசையமைப்பாளர் உரிமை கோர முடியாது’
– சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மே 21 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
‘பாடலின் உரிமைகள் திரைப்படத் தயாரிப்பாளருக்கு சொந்தமானவை. அவை சட்டப்பூர்வமாக சரிகம நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன’ எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
‘நீதிமன்ற உத்தரவு மூலம் நீண்டகால போராட்டத்துக்கு சிறு வெளிச்சம் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் சென்றால் முழுமையான தீர்வு கிடைக்கும்’ என திரை விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வழக்கின் பின்னணி
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு ‘அகத்தியா’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான ‘மூடுபனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை ரீமிக்ஸ் செய்து யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தியிருந்தார்.
‘மூடுபனி’ படத்தின் இசை உரிமையைப் பெற்றுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், தங்கள் அனுமதியின்றி பாடலுக்கான உரிமையை இளையராஜா வழங்கிவிட்டதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
1980ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் மூலம் ‘மூடுபனி’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் உரிமைகள் சரிகம நிறுவனத்துக்கு சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டுவிட்டதாக, நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
‘இளையராஜா உரிமை கோர இயலாது’ – நீதிமன்றம்
ஜனவரி 25 ஆம் தேதி ‘அகத்தியா’ படத்தைத் தயாரித்த வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு எதிராக சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது.
பாடலின் அசல் பதிப்பில் இளையராஜா இசையமைப்பில் கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். அதுவே ‘அகத்தியா’ திரைப்படத்துக்காக மீண்டும் உருவாக்கப்பட்ட ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் யேசுதாஸ் பாடியிருந்தார்.
‘படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கான உரிமைகள் அனைத்தும் தங்களுக்கே சொந்தம்’ எனக் கூறிய சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், ‘சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பிய பிறகும், மீண்டும் உருவாக்கப்பட்ட பாடல் இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது’ என நீதிமன்றத்தில் வாதிட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லி உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
அதேநேரம், பாடலின் அசல் இசையமைப்பாளர் என்ற முறையில் அதன் மறு உருவாக்கத்துக்கு உரிமம் வழங்குவதற்கான அதிகாரம் இளையராஜாவுக்கு இருப்பதாக நம்பி அவரிடம் அனுமதி பெற்றதாக, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
நீதிமன்ற வாதத்தில் இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘என் இனிய பொன் நிலாவே இசைப்படைப்பு இளையராஜாவுக்கு சொந்தமானது. அதை மற்றவர்கள் தழுவி உருவாக்குவதற்கு அனுமதி அளிக்க முடியும்” என வாதிட்டார்.
ஆனால், இந்த வாதத்தை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. ‘பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா தானே தவிர பாடலாசிரியர் அல்ல. அப்பாடல் வரிகளின் மீதோ முழுமையான ஒலிப்பதிவின் மீதோ அவரால் உரிமை கோர இயலாது’ என உத்தரவிட்டது.
2012-ஆம் ஆண்டு இந்திய காப்புரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதை குறிப்பிட்ட நீதிபதி, பல பத்து ஆண்டுகளுக்கு முன்பு இசையமைக்கப்பட்ட பாடல்களுக்கு காப்புரிமை சட்டத்தின் திருத்தங்களைப் பொருத்தி கூடுதல் உரிமைகளை இளையராஜாவுக்கு வழங்கலாம் என்ற வாதத்தையும் நிராகரித்தார்.
பட மூலாதாரம், YSR/Facebook
படக்குறிப்பு, யுவன் சங்கர் ராஜா
பாடல் மீது உரிமை யாருக்கு?
இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதிகள் ஹரிசங்கர், ஓம் பிரகாஷ் சுக்லா அமர்வு விசாரித்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, காப்புரிமை தொடர்பான சில விளக்கங்களையும் அளித்துள்ளது.
அதன்படி, ‘காப்புரிமை சட்டப்பிரிவு 2(b)ன்படி, இசைப்படைப்பு என்பது பாடலின் இசை மற்றும் மெட்டுகளை மட்டுமே குறிக்கும். அந்தப் பாடலில் வரும் வரிகளையோ இறுதி ஒலிப்பதிவையோ இசையமைப்பாளர் சொந்தம் கொண்டாட முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ செய்தி குறிப்பிடுகிறது.
‘படத்தில் இடம்பெறும் பாடல்களின் ஒட்டுமொத்த ஒலிப்பதிவு உரிமை படத்தின் தயாரிப்பாளரையே சேரும்’ எனக் கூறியுள்ள நீதிபதிகள், ‘பாடலுக்கான காப்புரிமையை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் மாற்றிக் கொடுத்துவிட்டார். ஆகவே, அந்நிறுவனத்துக்கே பாடலின் உரிமை சொந்தம்’ என உத்தரவிட்டுள்ளனர்.
‘நீண்ட கால போராட்டத்தில் சிறு தெளிவு’
“காப்புரிமை தொடர்பான நீண்டகால போராட்டத்துக்கு நீதிமன்ற உத்தரவின் மூலம் சிறிய தெளிவு கிடைத்துள்ளதாக பார்க்கிறேன்” என்கிறார், திரை விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.எஸ்.அந்தணன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தனது பாடலுக்கு காப்புரிமை கோரும் விவகாரத்தில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. காப்புரிமை கேட்பது சரியா.. தவறா என்ற கேள்விகள் எழுந்தன” என்கிறார்.
“அந்த வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு காப்புரிமை தொடர்பான கேள்விகளுக்கு விடை அளித்துள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், X/ilaiyaraaja
‘இது இறுதி தீர்ப்பு அல்ல’ – இளையராஜா தரப்பு வழக்கறிஞர்
“ஆனால், இது இறுதி தீர்ப்பு அல்ல” எனக் கூறுகிறார், இளையராஜாவின் வழக்கறிஞர் தியாகராஜன்.
“மூடுபனி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலைப் பயன்படுத்துவற்கான உரிமையை இளையராஜா வழங்கியிருந்தார். ஆனால், ‘எங்களிடம் உரிமை உள்ளது’ எனக் கூறி சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்கிறார் அவர்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தங்களைப் பாதிப்பதாகக் கூறி இளையராஜா மேல்முறையீடு செய்ததாகக் கூறும் தியாகராஜன், “வழக்கில், ‘முகாந்திரம் இல்லை’ எனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், பிரதான வழக்கே தள்ளுபடி ஆனது போல சிலர் பேசி வருகின்றனர்” எனக் கூறுகிறார்.
“இளையராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த பிரதான வழக்கு நிலுவையில் உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.
“அந்த வகையில், யாருக்கு உரிமை உள்ளது என்பது இன்னமும் முடிவாகவில்லை” என்கிறார் வழக்கறிஞர் தியாகராஜன்.
பட மூலாதாரம், x
படக்குறிப்பு, கங்கை அமரன்
‘பாடலுக்கு உரிமை கோரவில்லை’
ஒலிப்பதிவு, பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் உரிமை கோர முடியாது என்ற நீதிமன்ற உத்தரவு பற்றி கேட்டபோது, “நாங்கள் பாடல் வரிகளுக்கு உரிமை கோரவில்லை. ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை கங்கை அமரன்தான் எழுதியிருந்தார்” என்று தியாகராஜன் கூறுகிறார்.
அந்தவகையில், பாடல் வரிகளுக்கு சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் உரிமை கோர முடியாது என்று கூறி கங்கை அமரனும் வழக்கில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறும் தியாகராஜன், “பிரதான வழக்கில் இந்த மனு நிலுவையில் உள்ளது” என்கிறார்.
“எந்தப் படத்தின் பாடல் வரிகளுக்கும் இளையராஜா உரிமை கோருவதில்லை” எனக் கூறும் வழக்கறிஞர் தியாகராஜன், “பிரதான வழக்கின் விசாரணை முடியும்போது தான் அனைத்தும் முடிவாகும். ஆனால், வழக்கே முடிந்தது போல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அது தவறானது” எனக் குறிப்பிட்டார்.
“ராயல்டியை இளையராஜா திருப்பித் தர நேரிடலாம்”
பாடலுக்கான முழு உரிமையும் யாருக்கு என்ற பிரச்னை தொடர்ந்து நீடித்து வருவதாகக் கூறும் ஆர்.எஸ்.அந்தணன், “அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை” என்கிறார்.
“டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால், சில தயாரிப்பாளர்களிடம் பெற்ற ராயல்டியை இளையராஜா திருப்பித் தர நேரிடலாம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு தரப்புக்கும் ஒவ்வொரு நியாயம் உள்ளது. வழக்கில் இறுதி முடிவு வரும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.