பிரிஸ்டல் (Bristol) நகரிலுள்ள பிரெஞ்சே (Frenchay) பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டென்கோர்ட் சாலையில் (Sterncourt Road) உள்ள ஒரு குடியிருப்பில் இன்று காலை சுமார் 06:30 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. தகவலறிந்த எவோன் மற்றும் சோமர்செட் (Avon and Somerset)காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.
பாதுகாப்பு கருதி, அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, உள்ளூர் உணவகம் ஒன்றில் அமைக்கப்பட்ட தற்காலிக தங்கும் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இங்கிலாந்தின் தற்போதைய அச்சுறுத்தல் நிலையை கருத்தில் கொண்டு, இச்சம்பவம் ஒரு பயங்கரவாதச் செயல் அல்ல என்பதை காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அந்தப் பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் வசிக்கும் பிராட்லி ஷெப்பர்ட் என்பவர் கூறுகையில், ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டு தான் படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்ததாகத் தெரிவித்தார். சத்தம் கேட்ட 10 நிமிடங்களுக்குள் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து அவசரக்கால சேவைகளும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வெடிப்புச் சம்பவத்தால் அருகிலுள்ள பிற வீடுகளுக்குப் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஸ்பீட்வெல் (Speedwell) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிலும் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பிரிஸ்டலில் வெடிப்புச் சம்பவம்: இருவர் உயிரிழப்பு; அவசரநிலை பிரகடனம்! appeared first on Vanakkam London.