10
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015ஆம் ஆண்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்யா வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (6) ஏகமனதாக உறுதி செய்துள்ளது.
யாழ் மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்கும்படி பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்து பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் குழாம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனை மற்றும் ஏனைய தண்டனைகளையும் உயர்நீதிமன்றம் இன்று மீள உறுதிப்படுத்தியது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இவ்வழக்கில் தொடர்புடைய ஏனைய இரு பிரதிவாதிகளின் தண்டனைகளை நீக்கி அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பகுதியில் பாடசாலை சென்று திரும்பிய 18 வயதுடைய மாணவி வித்தியா கடத்தப்பட்டு, கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இன்றைய தினம் ‘ஸூம்’ தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த போதே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.