0
“புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக சிறந்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது ” என்று சீனத் தூதுவர் தெரிவித்தார்.
இந்த மாதம் 31ஆம் திகதியுடன் தனது சேவையை நிறைவு செய்யும் இலங்கையிற்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹொங் (Qi Zhenhong),கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். இதன்போது அவர் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது-
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒட்டுமொத்தமாக இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக சிறந்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதே எனது உணர்வாகும். தற்போதைய அரசாங்கம் தொழிற்துறைக் கொள்கைகள், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்தக் கொள்கைகளுடன் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் இலங்கையின் நிலைமை மேலும் சிறப்பாக அமையும் என நான் நினைக்கிறேன். இலங்கை என்பது சீனாவின் பாரம்பரிய நட்பு நாடாகும். இலங்கை நண்பர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இலங்கையிலான எனது 6 வருட சேவிக் காலத்தில், சில இயற்கைப் பேரிடர்களின் போது நானும் எனது குழுவினரும் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று உதவிகளை வழங்கினோம். சீனாவின் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களையும் சீன மக்களின் நட்புறவையும் நான் இலங்கைக்குக் கொண்டு வந்தேன். இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு போன்றே எனக்குத் தோன்றுகிறது. எனக்கும் எனது குழுவினருக்கும் இலங்க மக்கள் வழங்கிய தாராளமான ஒத்துழைப்பு, உண்மையான நட்பு மற்றும் விலைமதிப்பற்ற ஆதரவிற்காக நன்றி தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். எனது சேவைக்காலம் இந்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தாலும், முடிந்த போதெல்லாம் இலங்கையுடன் தொடர்பில் இருக்க நான் நடவடிக்கை எடுப்பேன்.” என்றார்
இதன்போது, மல்வத்தை மகா நாயக்க தேரர் அதி வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும், அஸ்கிரிய மகா நாயக்க தேரர் அதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் சீனத் தூதுவரின் சேவையைப் பாராட்டினர்.
மல்வத்தை மகா நாயக்க தேரர் அதி வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவிக்கையில்-
ஒரு வெளிநாட்டுத் தூதுவராக இலங்கைக்கு ஆற்ற வேண்டிய மிகச்சிறந்த சேவையை சீனத் தூதுவர் ஆற்றியுள்ளார். சீனத் தூதுவர் அவரது 06 வருட காலப் பதவிக்காலத்தில் ஆற்றிய சேவைகளை நாம் மறக்க முடியாது. எமது நாட்டிற்கு ஏதேனும் ஆபத்துகள் ஏற்பட்ட நேரங்களில், முதலில் உதவிக்கு வந்தவர்களுள் ஒருவராகும். பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் பௌத்த மதத்திற்காக அவர் பெரும் சேவையாற்றியுள்ளார் என்றார்.
அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் அதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவிக்கையில்,
“பேரிடர் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், இலங்கையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவு சீனத் தூதுவர் ஆற்றிய பாரிய பங்களிப்பு பெரிதும் பாராட்டத்தக்கது. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக இவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் மிகவும் போற்றுதலுக்குரியவை” என்று கூறினார்.

