• Sun. Sep 20th, 2026

24×7 Live News

Apdin News

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது | அஜித் பி பெரேரா

Byadmin

Sep 20, 2026


அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தமானது மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்வதையும் அது குறித்து விவாதிப்பதையும் தடுப்பதற்கு அரசு முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை (19)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் கொண்டுவர முனையும் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், மிகக் குறுகிய காலத்திற்குள் 27 மேல் நீதிமன்ற நீதிபதிகள், 9 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் 4 உயர் நீதிமன்ற நீதியரசர்களை தன் விருப்பப்படி நியமிக்கும் முழு அதிகாரம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குக் கிடைக்கும்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் அரசியலமைப்புச் சபைக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலை உருவாக்கப்படுகிறது. இது இலங்கை நீதித்துறை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அதன் சுயாதீனத்தையும் சர்வதேச நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கும்.

அதேவேளை, அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தமானது மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்வதையும் அது குறித்து விவாதிப்பதையும் தடுப்பதற்கு அரசு முற்படுகிறது. சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதில் நீதிமன்றங்களுக்கு இருக்கும் சுதந்திரமான அதிகாரத்தைக் குறைக்கவும் இச்சட்டமூலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திருத்தங்களுக்கு நாட்டின் பதவி வகிக்கும் நீதிபதிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மாத்திரமன்றி, ஆசிய சட்டத்தரணிகள் சங்கம், காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சுயாதீனத்திற்கான சிறப்புப் பிரதிநிதி உட்பட பல சர்வதேச அமைப்புகளும் பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தில் பதவிகளையும் சிறப்புரிமைகளையும் அனுபவிக்கும் மிகச் சில சட்டத்தரணிகளைத் தவிர, 99 சதவீதமான சட்டத்தரணிகள் இத்திருத்தத்திற்கு எதிராகவே உள்ளனர்.

எனவே, 22 ஆவது திருத்தம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும் வரும் 24 ஆம் திகதி காலை, பாராளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள பொல்தூவ சந்தியில் பிரமாண்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். கட்சி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க அனைத்துப் பொதுமக்களையும் இப்போராட்டத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

By admin