கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கல்வி சமூகவியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜேசன் ஆர்டே (Jason Arday), இலண்டனில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
41 வயதான இவர், சமீபத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட கல்விப் புலமைத் திருட்டு முறைப்பாடுகளைத் தொடர்ந்து, தனது பேராசிரியர் பதவியை கடந்த வாரம் இராஜினாமா செய்திருந்தார்.
தெற்கு இலண்டனில் உள்ள பேட்டர்சீ (Battersea) பகுதியில் உள்ள ஒரு முகவரியில் அவர் மயக்கமற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. இலண்டன் பெருநகர பொலிஸ் அவரது மரணத்தை எதிர்பாராத ஒன்று என்றும் இதில் சந்தேகத்துக்கிடமான பின்னணி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் பேராசிரியரான ஜேசன் ஆர்டே, தனது ஆய்வுகளில் பிறரது படைப்புகளைத் திருடிப் பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து தீவிர பொது விமர்சனத்துக்கு உள்ளானார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்த போதிலும், தனது ஆரம்பகால ஆய்வுகளில் சில பிழைகள் இருந்ததை ஒப்புக்கொண்டார். தனக்கு இருக்கும் ஆட்டிசம் (Autism) குறைபாடு காரணமாக தகவல்களைப் புரிந்துகொள்ள மற்றவர்களைப் பின்பற்றும் முறையை கையாண்டதே இந்தப் பிழைகளுக்குக் காரணம் என்று அவர் விளக்கமளித்திருந்தார்.
தன்னை ஒரு “பொய்யர்” போலச் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆர்டேவின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர் மீது தொடுக்கப்பட்ட தவறான தகவல்கள் அடங்கிய பிரச்சாரம் அவருக்கு மிகுந்த அழுத்தத்தைத் தந்தது” என்று தெரிவித்துள்ளனர். அவர் அனைவரிடமும் நன்மையைக் காண விரும்பும் ஒரு மென்மையான மனிதர் என்றும் அவர்கள் உருக்கமாகக் கூறியுள்ளனர்.
அவரது நண்பரான பேராசிரியர் கெஹிண்டே ஆண்ட்ரூஸ் கூறுகையில், இராஜினாமாவுக்குப் பிறகு ஆர்டே மிகுந்த மனச்சோர்வுடன் இருந்ததாகவும், வீட்டை விட்டு வெளியே வராமல் உடல் எடையை இழந்திருந்ததாகவும் தெரிவித்தார்.
ஜேசன் ஆர்டேவின் வாழ்க்கை ஒரு உத்வேகமான பயணமாகும். 11 வயது வரை பேசும் திறன் இல்லாமலும், 18 வயது வரை எழுதப் படிக்கத் தெரியாமலும் இருந்த அவர், பின்னர் தனது விடாமுயற்சியால் கல்வியில் உயர்ந்து, 2023இல் தனது 37ஆவது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளைய கருப்பின பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் கிளாஸ்கோ உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெபோரா ப்ரெண்டிஸ் மற்றும் கல்விச் செயலாளர் லூசி பவல் ஆகியோர் இந்தத் துயரச் செய்தியால் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அவரது நியமனம் குறித்த ஒரு சுயாதீன விசாரணை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post புலமைத் திருட்டு சர்ச்சையில் சிக்கிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் உயிரிழப்பு! appeared first on Vanakkam London.