பட மூலாதாரம், Melissa Weiss/Center for Astrophysics |Harvard & Smithsonian
கட்டுரை தகவல்
தொலைதூர நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வரும், பூமியைப் போன்ற பாறைத் தன்மை கொண்ட கோள் ஒன்றின் வளிமண்டலத்தை விஞ்ஞானிகள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். அந்த புறக்கோள், அது சுற்றி வரும் நட்சத்திரத்தில் இருந்து உயிரினங்கள் வாழத் தகுந்த மண்டலத்தில் (habitable zone) அமைந்துள்ளது.
நமது சூரிய குடும்பத்திற்கு அப்பாலும் பூமியைப் போன்ற உயிர்கள் வாழ ஏதுவான சூழலைக் கொண்ட கோள் இருக்கக்கூடும் என்பதற்கு இதுவரை கிடைத்துள்ள மிக வலுவான சான்று இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்த புறக்கோளின் வளிமண்டலத்தில் ஹீலியம் வாயு இருக்கிறது. ஹீலியம் வாயு மட்டுமே உயிர்களுக்கான ஆதாரமாக அமையாது என்றாலும், அதன் வளிமண்டலத்தில் வேறு வாயுக்களும் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரான ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் கால்லின் செருபிம், இந்தக் கண்டுபிடிப்பை “மிகவும் முக்கியமானது” என்று விவரித்தார்.
“சூரியனல்லாத மற்றொரு நட்சத்திரத்தின் உயிரினங்கள் வாழத் தகுந்த மண்டலத்தில் இருக்கும் பாறைத்தன்மை கொண்ட ஒரு கோளில் வளிமண்டலம் இருப்பது கண்டறியப்படுவது இதுவே முதல்முறை” என்று அவர் தெரிவித்தார்.
அந்த புறக்கோள் LHS 1140 b என அழைக்கப்படுகிறது. இது பூமியில் இருந்து சுமார் 48 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது நமது சூரியனைவிட அளவில் மிகச் சிறியதாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் ஒரு சிவப்பு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
இதுவரை, தொலைதூர நட்சத்திரங்களைச் சுற்றி வரும் 6,000க்கும் மேற்பட்ட புறக்கோள்கள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது; ஏனெனில், அறிவியலின் மிகப்பெரிய குறிக்கோள்களில் ஒன்றான ‘வேறொரு கோளில் உயிர்களின் இருப்பைக் கண்டறிதல்’ என்பதை நோக்கி ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுப் பயணத்தை இது ஒரு படி மேலே கொண்டு செல்கிறது.
சயின்ஸ் ஆய்விதழில் இந்தக் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட ஆய்வாளர்கள், உயிர்கள் இருப்பதாக தாங்கள் இன்னும் கண்டறியவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர்.
இருப்பினும், ஒரு புறக்கோளில் உயிர்கள் வாழ்வதற்கு அங்கு நீர் இருக்க வேண்டும் என்று அவர்கள் விளக்கினர். நீர் இருப்பதற்கும், அந்தக் கோள் தான் சுற்றி வரும் நட்சத்திரத்தில் இருந்து சரியான தொலைவில் நிலைகொண்டிருக்க வேண்டும். நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருந்தால், அதிகமாக வெப்பமடையும்; மிகவும் தொலைவில் இருந்தால், அதிகமாக குளிர்ச்சியடையும். திரவ நிலையில் நீர் இருக்க வேண்டுமெனில் அதற்கேற்ற சரியான வெப்பநிலை நிலவக்கூடிய இடைப்பட்ட பகுதியில் அந்தக் கோள் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.
கோள் ஆய்வாளர்கள் இந்தப் பகுதியை “கோல்டிலாக்ஸ் மண்டலம்” என்று அழைக்கிறார்கள். கோல்டிலாக்ஸ் என்ற புகழ்பெற்ற சிறார் கதையில் இருந்து இந்தப் பெயர் வந்தது; அந்தக் கதையில் வரும் சிறுமி, தான் உண்ணும் கஞ்சி மிகவும் சூடாகவும் இல்லாமல், மிகக் குளிர்ச்சியாகவும் இல்லாமல், சரியான பதத்தில் இருக்க வேண்டுமென விரும்புவாள்.
அதேபோல, கோல்டிலாக்ஸ் மண்டலத்தில் அமைந்திருக்கும் ஒரு கோள், அது சுற்றி வரும் நட்சத்திரத்திடம் இருந்து சரியான தொலைவில் இருப்பதால், அங்கு நிலவும் வெப்பநிலை திரவ நிலையில் நீர் இருப்பதற்கு ஏற்றதாக அமையக்கூடும்.
பட மூலாதாரம், NASA
படக்குறிப்பு, K2-18b என்பது ஒரு குளிர்நிறைந்த குள்ள நட்சத்திரத்தைச் சுற்றும் ஒரு புறக்கோள்
விஞ்ஞானிகள் தாங்கள் ஆராய்ந்த நட்சத்திரங்களின் கோல்டிலாக்ஸ் மண்டலங்களுக்குள் நூற்றுக்கணக்கான புறக்கோள்களைக் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், அவற்றில் சில டஜன் புறக்கோள்கள் மட்டுமே பூமியைப் போன்ற சிறிய, பாறைத் தன்மை கொண்ட கோள்களாக உள்ளன. எனவே, இத்தகைய கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
அதேவேளையில், இதுவரை அத்தகைய பாறைத்தன்மை கொண்ட புறக்கோள் எதிலும் வளிமண்டலம் இருப்பது கண்டறியப்படவில்லை. இதுவரை, LHS 1140 b புறக்கோளின் வளிமண்டலத்தில், அநேகமாக அதன் மேல் அடுக்கில், ஹீலியம் வாயு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. ஹீலியம் வாயுவால் மட்டுமே உயிர் வாழத் தகுந்த சூழலை தர முடியாது.
இருப்பினும், வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் ஏற்புடைய பிற வாயுக்கள் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் டேவிட் சார்போன்னோ, இந்தக் கண்டுபிடிப்பின் மிக முக்கியமான அம்சமாக, விஞ்ஞானிகள் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே வளிமண்டலத்தைக் கொண்ட பூமியை ஒத்த ஒரு புறக்கோளைக் கண்டறிந்து இருப்பதைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “நாம் மட்டும் இந்தப் பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோமா? பூமிக்கு அப்பால் அல்லது சூரிய குடும்பத்திற்கு அப்பால் உயிர்கள் இருக்கின்றனவா? இப்படியாக, மக்கள் பொதுவாகப் பெரிய கேள்விகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில், சூரிய குடும்பத்திற்கு வெளியே பிற நட்சத்திரத்தின் உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில், பாறைத்தன்மை கொண்ட ஒரு கோளில் கண்டறியப்பட்ட முதல் வளிமண்டலத்தை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது,” என்று விவரித்தார்.
பூமிக்கு அப்பால் உயிர்களைத் தேடும் முயற்சியில் விஞ்ஞானிகள் LHS 1140 b புறக்கோளை மட்டுமே ஆய்வு செய்யவில்லை.
அதுபோக, சப்-நெப்டியூன் வகையைச் சேர்ந்த K2-18b என்ற மற்றொரு புறக்கோள் மீதும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அதன் உட்புறத்தில் அதிகளவில் நீர் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பூமியில் கடல்வாழ் உயிர்களுடன் தொடர்புடைய டைமெதில் சல்பைட் என்ற வாயுவின் சாத்தியமான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்தப் புறக்கோள் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.
இருப்பினும், 2025இல் நாசா தலைமையிலான மறு ஆய்வு ஒன்றில், அந்த வாயுவின் இருப்பை உறுதி செய்த சிக்னல் மிகவும் பலவீனமாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஆய்வு, உயிர்களின் உதவியின்றி டைமெதில் சல்ஃபைட் உருவாகக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டியது.
விஞ்ஞானிகள் TRAPPIST-1 அமைப்பிலுள்ள ஏழு பாறைத்தன்மை கொண்ட புறக்கோள்களை உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி மேற்கொண்ட ஆய்வுகள், TRAPPIST-1d புறக்கோளில் பூமியைப் போன்ற வளிமண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறை நிரூபித்துள்ளன. இருப்பினும், TRAPPIST-1e குறித்துச் சேகரிக்கப்பட்ட தரவுகள் இன்னும் தெளிவான விடையைக் கொடுக்காததால், அங்கு பூமியைப் போன்ற வளிமண்டலம் இருக்கிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் நிச்சயமற்ற நிலையே நீடிக்கிறது.