மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம், இதற்கு முன்னர் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது.
அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 2018இல் கோலில் ஏற்பட்ட ஒரு தீ விபத்து காரணமாக அது தடைபட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு செப்டம்பர் 17 குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்த விழாவுக்கு அனுமதி அட்டைகள் (பாஸ்) வழங்குவதில் குளறுபடிகள் உள்ளதாகவும், விழாவில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன் நேற்று (செப்டம்பர் 15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், “பாஸ் விவகாரத்தில் நாங்கள் எந்தத் தலையீடும் செய்யவில்லை. அறங்காவலர்கள் குழுவைத் தொடர்பு கொண்டு அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யச் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்தக் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுவது ஏன்? இப்போது எழுந்துள்ள ‘அரசியல் தலையீடு’ குறித்த பின்னணி என்ன?
17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
“குடமுழுக்கு என்ற சொல்லின் பொருள் ‘பெரிய கலச நீரால் நீராட்டும் சடங்கு’ என்பதாகும். பொதுவாக, ஒரு கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சடங்கு நடத்தப்பட வேண்டும் என்பது நியதி” என மதுரை மன்னார் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் உமா ஓர் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Meenakshi Amman Temple
படக்குறிப்பு, ஆயிரங்கால் மண்டபம் (கோப்புப் படம்)
அவரது கூற்றுப்படி, “கோவிலைச் சீரமைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்தச் சடங்கு திகழ்ந்தது. சேதமடைந்த பகுதிகளைப் பழுதுபார்த்தல், கோபுரங்களைத் தூய்மைப்படுத்தி வண்ணம் பூசுதல், உள் மண்டபங்கள், வெளிப்புறச் சுவர்கள் போன்றவற்றைச் செப்பனிடுதல் ஆகியவை இதில் அடங்கும்.”
“மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விரிவான திருப்பணிகளுக்குப் பிறகு கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டன. கி.பி. 1381இல் குமார கம்பண உடையாரால் மீனாட்சி சன்னதிக்கு மட்டும் ஒரு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது” என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதேபோல, கி.பி. 1628இல் திருமலை நாயக்கர் இந்தக் கோவிலில் திருப்பணிகளை மேற்கொண்டார். கோவிலின் சேதமடைந்த பகுதிகள் அகற்றப்பட்டு, பெரும் பொருட்செலவில் அவை புதிதாகக் கட்டப்பட்டன. கட்டுமானப் பணிகளுக்காக நன்றாக அரைக்கப்பட்ட வெல்லம், கடுக்காய், நெல்லிக்காய், உளுந்து ஆகியவை பயன்படுத்தப்பட்டன. அது சுண்ணாம்புக் கலவையுடன் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டது.
அதோடு, 1877, 1923, 1963, 1974, 1995 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட குடமுழுக்கு விழாக்கள் குறித்த விரிவான குறிப்புகள் உள்ளன. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தக் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
அதன் பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 2021இல் குடமுழுக்கு விழா நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கோவிலின் கிழக்குக் கோபுர வளாகத்திற்குள் அமைந்துள்ள பிரமாண்டமான தூண்களைக் கொண்ட மண்டபமான வீரவசந்தராய மண்டபத்தில் பிப்ரவரி 2, 2018 அன்று ஒரு தீ விபத்து ஏற்பட்டது.
“இந்தத் தீ விபத்து, கோவிலின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டபங்களில் ஒன்றுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது” என மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் தெரிவிக்கிறது.
அதன்படி, “இந்த மறுசீரமைப்பு என்பது எளிய பழுதுபார்ப்பு அல்ல, ஏற்கெனவே உள்ள கட்டமைப்பின் அசல் திராவிடக் கைவினைத் திறனுடன் பொருந்தக்கூடிய 15 அடி நீளம் கொண்ட 79 செதுக்கப்பட்ட கறுப்பு கிரானைட் தூண்களைத் திரட்ட வேண்டியிருந்தது.”
“இதற்கென பொருத்தமான கல்லைக் கண்டறிவது, அதை வெட்டி எடுப்பது, கொண்டு செல்வது மற்றும் தேவையான ஆகம விதிகளுக்கு ஏற்ப அதைச் செதுக்கச் செய்வது ஆகியவை பல ஆண்டுகள் தேவைப்படும் ஒரு திட்டமாக இருந்தது.”
அதைத் தொடர்ந்து, மொத்தம் 186 பணிகள் ரூ. 32.29 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில், ரூ.15.40 கோடி மதிப்பிலான 86 பணிகள் கோவில் நிதியில் இருந்தும், ரூ.16.89 கோடி மதிப்பிலான 100 பணிகள் நன்கொடையாளர்களின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை கூறுகிறது.
இந்தப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டன. மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை (செப்டம்பர் 17) காலை 7.40 முதல் 8.10 மணி வரை நடைபெறவுள்ளது.
படக்குறிப்பு, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன்
‘அரசியல் தலையீடு’
இந்த நிலையில், நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“இந்தத் திருவிழாவை எந்தவித கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுத்துவிடாமல் ஒருமித்த கருத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாக நடத்திட வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் நான் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், எந்தவொரு செயல்பாட்டிலும் எங்களைக் கலந்தாலோசிக்காமல், அரசியல் தலையீட்டுடன் தன்னிச்சையாகச் செயல்படும் கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன” என்று அவர் கூறினார்.
“அனுமதி அட்டைகளைப் (பாஸ்) பொறுத்தவரை 9,000 எனவும், 11,000 எனவும் தினமும் ஒரு இலக்கத்தில் தகவல்கள் வெளிவருகிறது. அதிலும் மிகவும் மதிக்கத்தக்க வகையில் உள்ள நன்கொடைதாரர் மற்றும் உபயதாரர்களுக்கு இந்த அழைப்பு சென்று சேர்ந்துள்ளதா என எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.”
“யாரெல்லாம் இதில் விடுபட்டுவிடக் கூடாது என்பதைப் பட்டியலாக நாங்கள் தயாரித்து வைத்துள்ள இந்தச் சூழ்நிலையில் அதை கோவில் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை” என்றும் அவர் கூறினார்.
“கடந்த 1963ஆம் ஆண்டு பி.டி.ராஜன் தலைமையில் திருக்கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்று, மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடம் சாற்றிய குடும்பத்தின் வழிவந்த எங்கள் குடும்பத்தில் என்றைக்குமே அரசியலையும், ஆன்மீகத்தையும் நாங்கள் இணைத்துப் பார்த்ததில்லை” என்று அவர் தெரிவித்தார்.
“ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது மட்டுமின்றி, ஒரு விழா சிறப்புடன் நடைபெற வேண்டுமென்ற பெருந்தன்மை இல்லாமல் செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், CTR.Nirmalkumar/Facebook
படக்குறிப்பு, அமைச்சர் நிர்மல் குமார்
அமைச்சர் கூறியது என்ன?
மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி, அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “குடமுழுக்கு விழாவில் கோவிலின் மேல்தளத்தில் எத்தனை பேரை அனுமதிப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.
“ஆரம்பக்கட்டமாக 9,000 பேரை அனுமதிப்பது குறித்து திட்டமிடப்பட்டு இருந்தாலும், அந்த எண்ணிக்கையிலான பக்தர்களை மேல்தளத்தில் பாதுகாப்பாக அனுமதிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த ஆய்வு முடிந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.
பாஸ் விநியோக விவகாரத்தில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை என்றும், பாஸ்களை தாங்கள் பார்வையிடக்கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்குப் பணிகளில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், அறங்காவலர் குழுவினரைத் தொடர்பு கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.