திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற மூதாட்டி கடந்த 35 ஆண்டுகளாக சாலை ஓரத்தில் கடை அமைத்து சீசனுக்கு ஏற்றார் போல் பழ வியாபாரம் செய்து வருகிறார். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் வழக்கம் போல் மாம்பழங்களை மொத்தமாக வாங்கி ஜெயலட்சுமி விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் மாம்பழம் வாங்க வந்த பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் டம்மி 500 ரூபாய் கொடுத்து ரூ.150 -க்கு மாம்பழம் வாங்கிவிட்டு மீதி பணத்தை வாங்கிச் சென்றார். சிறிது நேரம் கழித்து பையில் வைத்திருந்த அந்த 500 ரூபாய் நோட்டை மூதாட்டி ஜெயலட்சுமி எடுத்து பார்த்தபோது சந்தேகம் ஏற்பட்டது. அந்த ரூபாய்நோட்டை அருகில் இருந்தவர்களிடம் காட்டி கேட்டபோது அது போலியான டம்மி 500 ரூபாய் என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மிகுந்த மன வருத்தத்தில் கண்ணீர் விட்டார்.