• Thu. May 21st, 2026

24×7 Live News

Apdin News

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடு திருப்தியாக இல்லை | தியாகராஜா நிரோஷ்

Byadmin

May 21, 2026


ஏனையவர்களை மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ளபோதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கருவி நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் வள நிலையத் திறப்பு இன்று புதன்கிழமை (20) கோப்பாயில் நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போரின் காரணமாக தமிழ் மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். போர் காரணமாக மாற்றுத்திறனாளி ஆக்கப்பட்டவர்களை போசிப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எந்த சிறப்புத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. மாறாக சாதாரண வரையறுக்கப்பட்ட திட்டங்களுக்குள்ளாகவே கையாள முயற்சிக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளனர். இவ்வாறாக மாற்றுத்திறனாளிகளாக தமது உரிமைகளுக்காகவும் பிரஜைகள் என்ற வகையிலும் அரசின் விசேட கவனிப்பிற்கு தேவையுள்ளவர்களாக பலர் உள்ளனர்.

அரசு யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் ரணவிரு சேவா என்ற அடிப்படையில் போரில் மாற்றுத்திறனாளியாகிய படையினருக்கு சகல மேலோங்கிய சலுகைகளையும் வழங்குகின்றது. நாங்கள் மாற்றுத்திறனாளி ஒருவருக்குக் கிடைக்கத்தக்க சலுகைகள் தொடர்பில் விமர்சிக்கவில்லை. ஆனால் போரில் பாதிக்கப்பட்டு மாற்றத்திறனாளியாக்கப்பட்ட ஏனைய இனங்களையும் தரப்புக்களையும் சிவிலியன்களையும் மாற்றுத்திறனாளிகள் என்ற அடிப்படையில் அரசு சமமாக அணுவே கோருகின்றோம்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமை விடயத்தில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அஜீத் பெரோர எதிர் சட்டமா அதிபர் வழக்கிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பிலும் உங்களுக்கான வரப்பிரசாதங்கள் தொடர்பிலும் நீங்கள் விட்டுக்கொடுப்பவர்களாக இருக்கக் கூடாது. வடக்கு மாகாணத்தில் மாற்றத்திறனாளிகள் பாடசாலை கூட ஒன்றுதான் உள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் உங்களுக்கான பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பினைக் கொண்டுள்ளன. அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நாம் நிதியை ஒதுக்கி சிலவற்றை மேற்கொள்கின்றோம்.  மாற்றுத்திறனாளிகளின் வீதிகளை புனரமைப்பதை முன்னுரிமைப்படுத்துகின்றோம். உங்களுக்கான வருமானம் தரும் துறைகளிலும் ஒத்துழைக்க உள்ளூராட்சி மன்றங்கள் தயாராக உள்ளன. தொடர்ந்து சம்பாசித்த நல்ல திட்டங்களை முன்னெடுக்க நாம் விரும்புகின்றோம்.

நாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசொன்று ஆற்றவேண்டிய பொறுப்புள்ள பணியை கருவி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இவ்வளவு தூரம் மாற்றத்திறனாளிகளுக்கான வள நிலையத்தினை அமைக்க ஒத்துழைத்த கொடையாளர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். நாங்கள் சகல வளங்களையும் ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளின் சமூக கலாசார பொருளாதார அரசியல் நலன்களை பாதுகாப்போம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

By admin