• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

‘முதல்வர் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுப்பதா?’ – துணைவேந்தர் நியமன சிக்கல் எப்போது தீரும்?

Byadmin

Jul 17, 2026


துணை வேந்தர் நியமனம், ஆளுநர், திமுக, தவெக

பட மூலாதாரம், X/Lok bhavan

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசுப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது ஆய்வு முடிந்த பிறகு வாய்மொழித் தேர்வுக்கான கோப்புகளைச் சமர்ப்பிக்கிறார்.

வழக்கமாக துணைவேந்தர் அந்தக் கோப்பில் கையெழுத்திட வேண்டும். அந்தப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லாததால் நிர்வாகம் ஒருங்கிணைப்பாளர் குழுவிடம் (Convenor committee) இருக்கிறது. அந்தக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளதால் அனைவரிடமும் கையெழுத்து பெற வேண்டும்.

இருவர் கையெழுத்திட்ட நிலையில் தேர்தல் நெருங்கியதால் அந்த மாணவரின் கோப்பு தேங்கியது. கோப்பில் மூன்று உறுப்பினர்களின் பெயர்களும் அச்சிடப்பட்டிருந்தன. தேர்தலுக்குப் பிறகு உயர் கல்வித் துறை செயலாளர் மாறி புதிய செயலாளர் வந்துள்ளார். தற்போது அவரது கோப்பை மீண்டும் புதிதாக அச்சிட்டு, மீண்டும் மூன்று உறுப்பினர்களிடமும் கையெழுத்து பெற வேண்டிய சூழல் உருவானது.

முழுநேர துணைவேந்தர் இல்லாத காரணத்தால் பல்கலைக் கழக மாணவர்கள் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு இது ஓர் உதாரணம் மட்டுமே. பல்கலைக் கழகத்தின் பெயரையும் தனது பெயரையும் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் அந்த மாணவர் தான் எதிர்கொண்ட சிக்கலை பிபிசி தமிழிடம் விவரித்தார்.

பல்கலைக் கழக துணைவேந்தர் நியமன விவகாரம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையே சிக்கலான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் பல அரசு பல்கலைக் கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் ஒருங்கிணைப்பாளர் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

By admin