முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இன்று திங்கட்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றையதினம் பிற்பகல் சுமார் 1.40 மணியளவில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஜனவரி 12ஆம் திகதி முதல் 2017 மே 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிதியமைச்சராகப் பணியாற்றியபோது, நிதி அமைச்சின் ‘சிறப்புத் திட்டம்’ ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, தேசிய லொத்தர் சபையின் அப்போதைய தலைவி ஷியாமிலா பெரேராவுடன் இணைந்து சட்டவிரோத நியமனங்களை மேற்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் நிதியிலிருந்து சம்பளம் வழங்கும் அடிப்படையில், இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு நிர்வாக உதவியாளர் என மூவரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த மூவரும் தேசிய லொத்தர் சபைக்கு எவ்வித சேவையையும் வழங்காத போதிலும், அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு, 1994ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட இலஞ்சச் சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் ஊழல் குற்றமாக அமைகிறது என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கைதுக்கான காரணம் வெளியானது ! appeared first on Vanakkam London.