பட மூலாதாரம், Pankaj Kumar
கடந்த வாரம் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி பகுதியில் பிரபல ஹரியான்வி இசை வீடியோ கலைஞரான அங்கித் பாலியன் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசாருடன் நடைபெற்றதாகக் கூறப்படும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஷாம்லி காவல்துறையின் தகவலின்படி, கொல்லப்பட்டவர்கள் சுமித் மற்றும் மோகித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் ஹரியாணா மாநிலத்தின் சோனிபட் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கொல்லப்பட்ட இருவருக்கும் குற்றப் பின்னணி இருந்ததாகவும் ஷாம்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய ஷாம்லி காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங், அங்கித் பாலியன் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது இந்த என்கவுன்டர் நடந்ததாகக் கூறினார்.
இந்த என்கவுன்டரில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும் ஷாம்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
“விசாரணையின்போது, இந்தக் கொலையில் நான்கு பேர் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை நாங்கள் தேடி வந்தோம். நேற்று இரவு அவர்களில் இருவர் ஷாம்லி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் நடந்த என்கவுன்டரில் அவர்கள் கொல்லப்பட்டனர்,” என்று நரேந்திர பிரதாப் சிங் கூறினார்.
மேலும், “இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாவட்டம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களை சோதனையின்போது நிறுத்த முயன்றோம். அப்போது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மாவட்டம் முழுவதும் சோதனை நடைபெற்று வந்ததால், சிறிது தூரத்தில் அவர்கள் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறையினர் அவர்களைச் சுற்றிவளைத்தனர். அப்போது அவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் எங்களது இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Pankaj Kumar
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரிகளை உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையும் தேடி வந்தது.
ஷாம்லியில் நடைபெற்றதாகக் கூறப்படும் என்கவுன்டருக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையின் ஏடிஜி அமிதாப் யாஷ், கொல்லப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரிகளிடமிருந்து நவீன ரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கொலையில் தொடர்புடைய மற்ற குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களையும் காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருவதாக அவர் கூறினார்.
“ஷாம்லி காவல் நிலையம் அருகே அங்கித் பாலியன் கொல்லப்பட்டார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததிலும், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதிலும், இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். அவர்களை தொடர்ந்து தேடி வந்தோம்.
இன்று அதிகாலை, அவர்களில் இருவர் ஷாம்லி காவல்துறையினருடன் நடைபெற்ற என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து நவீன ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன,” என்று அவர் தெரிவித்தார்.
“இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற துப்பாக்கிதாரிகள் மற்றும் கும்பல் உறுப்பினர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்தின்படி அவர்கள் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அமிதாப் யாஷ் கூறினார்.
பட மூலாதாரம், Pankaj Kumar
அங்கித் பாலியனின் தந்தை கூறியது என்ன?
ஷாம்லி மாவட்டத்தின் பண்டிகேடா கிராமத்தைச் சேர்ந்த அங்கித் பாலியன், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி மாலை உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்து வெளியே வந்தபோது, ஷாம்லி கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் இருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, அங்கித் பாலியனின் தந்தை, “காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கிறோம். மீதமுள்ள இரண்டு துப்பாக்கிதாரிகளையும் காவல்துறையினர் விரைவில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும்,” என்றார்.
தனது மகன் கொல்லப்பட்ட பிறகு பேசிய அங்கித் பாலியனின் தந்தை, “காவல்துறைக்கு ஐந்து நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். அந்தக் காலத்துக்குள் கொலையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆறாவது நாளில் எங்கள் புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வோம். அதன் பிறகு எங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். இல்லையெனில் வீட்டில் அமைதியாக இருப்போம்,” என்று கூறியிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
உயிரிழந்த அங்கித் பாலியனின் மனைவி சீமா பாலியன், “தாக்குதலாளிகள் வேறு மாநிலத்தில் இருந்து வந்து கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்றனர். அப்போது உத்தரப் பிரதேச காவல்துறை எங்கே இருந்தது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
சந்தேகிக்கப்படும் இருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு பேசிய சீமா பாலியன், “காவல்துறையின் இந்த நடவடிக்கை எங்களுக்கு ஓரளவு ஆறுதலை அளித்துள்ளது. மீதமுள்ளவர்களையும் காவல்துறையினர் கைது செய்வார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.
பட மூலாதாரம், Ankit Baliyan Instagram
சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத், இந்த என்கவுன்டர் குறித்து கேள்வி எழுப்பியதுடன், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
“என்ன சூழ்நிலைகள் நிலவின? எந்த நிலைமைகள் உருவானதால் காவல்துறையினர் என்கவுன்டரில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது? என்பது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம். மிகக் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும், அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கவும், ஆயுள் தண்டனை வழங்கவும் நீதித்துறை நடைமுறைகளில் வழிவகைகள் உள்ளன. அப்படியிருக்கையில், இந்த என்கவுன்டர் ஏன் நடைபெற்றது? அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் என்ன? என்பது முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Pankaj Kumar
காவல்துறையுடன் நடைபெற்றதாகக் கூறப்படும் என்கவுன்டரில் உயிரிழந்த மோகித் மற்றும் சுமித் ஆகிய இருவரும் ஹரியாணா மாநிலத்தின் சோனிபட் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இருவரையும் பிடிக்க தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது. மேலும், அவர்கள் கோகி கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
காவல்துறை பதிவுகளின்படி, உயிரிழந்த மோகித் கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மீது அரை டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மோகித்தின் கிராமத்துக்குச் சென்ற உள்ளூர் செய்தியாளர் வினீத் குமார், மோகித்தின் உயிரிழப்பு குறித்த தகவல் வெளியான பிறகு கிராமத்தில் பதற்றமான அமைதி நிலவுகிறது. மேலும், அங்குள்ள மக்கள் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்து வருவதாக அவர் தெரிவித்தார்.
வினீத் குமாரின் தகவலின்படி, கடந்த சில ஆண்டுகளாக மோகித் தனது குடும்பத்தினரிடம் இருந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவரது தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மோகித் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கிய பிறகு குடும்பத்தினர் அவரிடம் இருந்து விலகிச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சுமித்தின் தந்தை ஊடகங்களிடம் பேசுகையில், தனது மகன் 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்ததாகவும், சில காலங்களுக்கு முன்புதான் மோகித்துடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
கூலித் தொழிலாளியான சுமித்தின் தந்தை, ஷாம்லி காவல்துறையினர் தன்னையும் தனது இளைய மகனையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகக் கூறினார்.
சுமித்தின் தந்தை தர்ம்பால், தனது மகனின் உயிரிழப்பால் வருத்தமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். அதேநேரத்தில், “அவன் செய்த செயல்களுக்கான விளைவுகளை அவன் சந்தித்திருக்கிறான்,” என்றும் கூறினார்.
இரு இளைஞர்களின் குடும்பத்தினரும் ஷாம்லியில் உள்ள உடற்கூராய்வு மையத்துக்கு சென்றிருந்தனர்.
பட மூலாதாரம், Pankaj Kumar
உத்தரப் பிரதேசத்தில் எத்தனை காவல்துறை என்கவுன்டர்கள் நடந்துள்ளன?
2026 மே மாதம் உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட தரவுகளின்படி, 2017 மார்ச் முதல் மாநிலத்தில் 17,043 காவல்துறை என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இதில் 289 பேர் கொல்லப்பட்டதாகவும், 11,834 பேர் காயமடைந்ததாகவும், 34,253 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச அரசு அளித்த தரவுகளை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் இந்த எண்ணிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த என்கவுன்டர் நடவடிக்கைகளில் 18 காவல்துறையினரும் உயிரிழந்ததுள்ளனர்.
இதற்கு முன்னதாக, 2025 டிசம்பர் 29-ஆம் தேதி வரை உத்தரப் பிரதேச காவல்துறை வெளியிட்ட தரவுகளின்படி, 2017 மார்ச் முதல் 16,284 காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 266 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குற்றங்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான தனது ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உத்தரப் பிரதேச அரசு கூறுகிறது.
அதேவேளையில், மனித உரிமை அமைப்புகளும் விமர்சகர்களும் இந்த என்கவுன்டர் சம்பவங்கள் குறித்து சுயாதீன விசாரணையும், பொறுப்புக்கூறலும் தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன
பட மூலாதாரம், Pankaj Kumar
இந்தியாவில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைத் தண்டிக்கும் வகையில் அவரைக் கொல்வதற்கு காவல்துறைக்கு சட்டம் அனுமதி அளிக்கவில்லை.
தற்போதுள்ள சட்டங்களின்படி, சட்டம் குறிப்பிடும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே காவல்துறையினர் தேவையான மற்றும் அளவுக்கு மீறாத வலிமையைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக, தற்காப்புக்காகவோ அல்லது மற்றொருவரின் உயிரைப் பாதுகாப்பதற்காகவோ மட்டுமே இதுபோன்ற வலிமையைப் பயன்படுத்த முடியும்.
இதனால்தான், என்கவுன்டர் எனக் கூறப்படும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும்போதெல்லாம், காவல்துறையினர் தாங்கள் தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கின்றனர்.
2014-ஆம் ஆண்டு பியுசிஎல் மற்றும் மகாராஷ்டிரா அரசு இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றம், காவல்துறை என்கவுன்டர்களில் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களைக் கையாள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வகுத்தது.
இந்த வழிகாட்டுதல்களின்படி, என்கவுன்டர் அல்லது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவங்களில், முதல் தகவல் அறிக்கைபதிவு செய்தல், சுயாதீன விசாரணை நடத்துதல், உடற்கூராய்வை காணொளியாகப் பதிவு செய்தல், நீதித்துறை நடுவர் விசாரணை நடத்துதல், தேசிய மனித உரிமைகள் ஆணையம் அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் வழக்கு குறித்து அறிக்கை சமர்ப்பித்தல் உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
மேலும், காவல்துறையின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்தின் ஆய்வுக்கு உட்பட்டதே என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. விசாரணையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக ஒருவரைக் கொன்றது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு