13
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்த கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழிப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் கடந்த 5ஆம் திகதி இளைஞன் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற அந்தக் கும்பல் அவ் இளைஞனை நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்தபின் காயங்களுடன், அந்நபரை வேறு ஒரு இடத்தில் தள்ளிவிட்டுச் சென்றது.
குறித்த கார் வேகமாக செலுத்தப்பட்டுள்ளதை அவதானித்த சோதனை சாவடியில் இருந்த பொலிஸார், நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், அந்த கார் சோதனை சாவடியில் நிறுத்தாமல் வேகமாகப் பயணித்துள்ளது. அதனையடுத்து அந்த காரை பொலிஸார் துரத்திச் சென்று இடைமறித்து சோதனையிட்ட போது, அதில் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சேட்டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது. தொடர்ந்து குறித்த ஐவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தியதில் 2.5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் பொலிஸாரின் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு அமைய கடத்தலுடன் தொடர்புடைய இளைஞனும் மீட்கப்பட்டு, வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.