பட மூலாதாரம், @bdbnp78
-
- எழுதியவர், ரஜ்னேஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக மலேசியா மற்றும் சீனாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
தாரிக் ரஹ்மான் ஜூன் 21-22 தேதிகளில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டார், மேலும் ஜூன் 23 முதல் சீனாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.
பிப்ரவரி மாதமே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி புது டெல்லிக்கு வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், ரஹ்மான் மலேசியா மற்றும் சீனாவுக்கு செல்லும் பயணத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளார்.
தாரிக் ரஹ்மான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, தங்கள் அரசாங்கம் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும் என்று அவரது கட்சி கூறி வந்தது.
பயணத் திட்டத்திலிருந்து இந்தியா விலக்கப்பட்டதை ஒரு நேரடி செய்தியாகக் கருதுவது முன்கூட்டிய முடிவாக இருக்கலாம் என்றாலும், இது ஒரு ராஜீய சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
பட மூலாதாரம், facebook.com/anwaribrahimofficial
முக்கிய ஒப்பந்தங்கள்
மலேசியாவில் சுமார் 8,00,000 வங்கதேசத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இது அங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் சக்தியில் தோராயமாக 37 சதவிகிதமாகும்.
வங்கதேச தொழிலாளர்கள் முக்கியமாக உற்பத்தி, கட்டுமானம், தோட்டப்பயிர் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் பணிபுரிகின்றனர்.
சீனாவின் லட்சியத் திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் வங்கதேசம் இணைந்துள்ளது.
சீனா தனது உள்கட்டமைப்பு முதலீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று வங்கதேசம் விரும்புகிறது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் வழியாக இந்தத் திட்டம் கடந்து செல்வதால், சீனாவின் இந்த ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
வங்கதேசமும் சீனாவும் வியாழக்கிழமை 13 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தங்கள் வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பிற மூலோபாயத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கியப் படிகளாகக் கருதப்படுகின்றன.
முன்பு இந்தியப் பொருளாதார மண்டலத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த மோங்லா நிலப்பரப்பில், பொருளாதார மண்டலத்தை மேம்படுத்துவதற்காக வங்கதேசம் சீன அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
வங்கதேசம் தற்போது அதிக சீன முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கித் தெளிவாக நகர்வது போலத் தெரிவதால், இந்த நடவடிக்கை வங்கதேசத்தின் முதலீட்டு உத்தியில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவும் வங்கதேசமும் 1975ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
1977ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தாரிக் ரஹ்மானின் தந்தையான ஜியா-வுர் ரஹ்மான், வங்கதேசத்தின் தலைமை ராணுவச் சட்ட நிர்வாகியாகவும் மற்றும் ராணுவத் தளபதியாகவும் முதன்முறையாக சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
தாரிக் ரஹ்மானின் தாயாரும், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா, பிரதமராக இருந்த காலத்தில் ஐந்து முறை உட்பட மொத்தம் ஒன்பது முறை சீனாவுக்குச் சென்றுள்ளார்.
இதன் பொருள், தாரிக் ரஹ்மானின் குடும்பம் ஆரம்பத்திலிருந்தே சீனாவுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது என்பதாகும். மறுபுறம், இந்தியாவுடனான அவர்களின் கடந்த காலம் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை.
பட மூலாதாரம், Reuters
தூதரக உறவுகள் மற்றும் உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள்
எந்த நாட்டின் பிரதமரானாலும், அவர்கள் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் பெரும்பாலும் தற்செயலாக நடைபெறுவதில்லை.
தெற்காசியாவின் உலக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிரூபமா சுப்பிரமணியன், எந்தத் தலைவர் முதலில் எங்குச் செல்கிறார் என்பது இனி சீனாவுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை என்று நம்புகிறார்.
நிரூபமா சுப்பிரமணியன் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “மே 30 அன்று, மியான்மர் அதிபர் மின் ஆங் இந்தியாவுக்கு வந்தார். அவர் அதிபரான பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் அது. இதிலிருந்து அதிபர் மின், இந்தியாவிடம் அதிக அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்று நாம் முடிவு செய்ய வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
“அதிபர் மின் அல்லது மியான்மர் எந்தளவுக்குச் சீனாவைச் சார்ந்து இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, அவர்கள் முதலில் எங்குச் செல்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது முற்றிலும் தவறானது. எனது புரிதலின்படி, முதலில் எங்கு செல்ல வேண்டும் என்பதில் சீனா எந்த அழுத்தமும் கொடுப்பதில்லை, ஏனெனில் இறுதியில் முடிவு எடுக்கும் பொறுப்பு தன் கையில் தான் வந்து சேரும் என்பது அதற்குத் தெரியும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு ஷேக் ஹசீனா எப்போதுமே தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட போதிலும், 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
அவரை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரி வருகிறது.
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் பெற்ற மக்கள் ஆதரவு ஷேக் ஹசீனாவுக்கு எதிரானது.
ஷேக் ஹசீனாவைப் போல தாரிக் ரஹ்மானும் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்தால், வங்கதேசத்தின் எதிர்க்கட்சிகள் அவரை முடக்குவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கும்.
“வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி எதிர்க்கட்சியாக உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமிக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தாரிக் ரஹ்மானை இந்தியாவுக்கு ஆதரவானவர் என்று குறிப்பிட அந்த வாய்ப்பைத் தவறவிடாது.
இத்தகைய சூழ்நிலையில், தாரிக் ரஹ்மானும் இந்தியா தொடர்பாக அதிக ஆர்வம் காட்டுவதைத் தவிர்க்கிறார்.
சீனா மற்றும் இந்தியா குறித்து வங்கதேசத்துக்கு எந்த தர்மசங்கடமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஷேக் ஹசீனாவின் காலத்தில் கூட வங்கதேசம் சீனாவுடன் மிகவும் ஆழமான உறவைக் கொண்டிருந்தது” என நிரூபமா சுப்பிரமணியம் கூறுகிறார்.
பட மூலாதாரம், @bdbnp78
சமநிலையைக் கடைப்பிடிப்பதில் உள்ள சவால்
வங்கதேசத்துக்கு இந்தியா ஒரு முக்கியமான நாடாகும்.
வங்கதேசம் பெரும்பாலும் “இந்தியாவால் சூழப்பட்ட” ஒரு நாடு என்று அழைக்கப்படுகிறது.
உண்மையில், வங்கதேசத்தின் 94 சதவிகிதம் இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 4,367 கிலோமீட்டர் எல்லையானது, அதன் சர்வதேச எல்லையில் 94 சதவிகிதமாகும். அதாவது, வங்கதேசம் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கங்களிலும் இந்தியாவால் சூழப்பட்டுள்ளது என்பது தான் இதன் பொருள்.
இத்தகைய சூழ்நிலையில், தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்தாலும் கூட, அது இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான பாதுகாப்பு சார்ந்துள்ள யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டதாகவே பார்க்கப்பட்டிருக்கும்.
இருப்பினும், உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள் பெரும்பாலும் தூதரக உறவுகளில் தலையிடுகின்றன.
வங்கதேசம் சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஷேக் முஜிபுர் ரஹ்மான் தனது நாட்டின் வெளியுறவுக் கொள்கைக் கோட்பாடு “அனைவருடனும் நட்பு, எவர் மீதும் பகைமை இல்லை” என்பதாகும் என்று கூறினார்.
ஆனால் வங்கதேசத்தின் உள்நாட்டு அரசியலில், ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது மகள் ஷேக் ஹசீனா ஆகியோர் இந்தியாவிடம் அதிக சார்புடையவர்களாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வங்கதேசம் வளர்ந்த நாடுகளுடனும் மற்றும் உலக தெற்கு நாடுகளுடனும் முக்கியமான உறவுகளைப் பேணி வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற போட்டி நாடுகளுடன் சமநிலையான உறவுகளைப் பராமரிக்கவும் முயற்சி செய்துள்ளது.
ஆனால், வங்கதேசத்தின் இந்தக் கொள்கை இந்தியா மற்றும் பாகிஸ்தான் விஷயத்தில் அதிக சவாலானதாக மாறுகிறது.
ஷேக் ஹசீனாவின் காலத்தில், வங்கதேசம் இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதாகத் தோன்றியது, அதேசமயம் ஜியா-வுர் ரஹ்மான் மற்றும் கலீதா ஜியா ஆகியோரின் ஆட்சியின் போது, வங்கதேசத்தின் அனுதாபம் பாகிஸ்தான் பக்கமும் இருந்தது.
பட மூலாதாரம், MOHD RASFAN/POOL/AFP via Getty Images
குறிவைக்கப்படும் இந்திய ஊடகங்கள்
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாகக் கருதப்படும் ‘குளோபல் டைம்ஸ்’ என்ற ஆங்கில நாளிதழ், தாரிக் ரஹ்மானின் பயணம் குறித்து ஒரு தலையங்கத்தை எழுதியுள்ளது.
“சீனா தொடர்ந்து 16 ஆண்டுகளாக வங்கதேசத்தின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருந்து வருகிறது. வங்கதேசத்தில் கிட்டத்தட்ட 1,000 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன, இவை ஒட்டுமொத்தமாகப் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன” என்று குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது .
“வங்கதேச தலைவரின் முதல் வெளிநாட்டுப் பயணத்தில் இந்தியா சேர்க்கப்படாதது குறித்து இந்திய ஊடகங்களின் சில பகுதியினர் அதிருப்தி தெரிவித்துள்ளன. தாரிக் ரஹ்மான் பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தில் இந்தியாவைப் புறக்கணித்து சீனாவுக்குச் சென்றதாகவும், வங்கதேசம் இந்தியாவுடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாகவும் இந்திய விமர்சகர்கள் சிலர் கூறினர்”
இத்தகைய விமர்சனக் கருத்துக்கள் சிலரிடம் உள்ள “அதிகார மனப்பான்மையில்” இருந்து உருவாகலாம்.
இந்த மனப்போக்கின் கீழ், அண்டை நாட்டுத் தலைவரின் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது ஒரு பிராந்திய வல்லரசுக்கான மரியாதை அல்லது முன்னுரிமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு நாடு சுதந்திரமான தூதரக முடிவுகளை எடுக்கும்போது, சிலர் அதை அவமரியாதையாக அல்லது சவாலாகக் கருதுகின்றனர்.
அமெரிக்காவுக்கான முன்னாள் வங்கதேச தூதர் ஹுமாயூன் கபீர், டாக்காவிலிருந்து வெளியாகும் ‘டெய்லி ஸ்டார்’ என்ற ஆங்கில நாளிதழில், “தாரிக் ரஹ்மானின் சீனப் பயணத்துக்குப் பின்னால் உள்ள உண்மையான கேள்விகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், @bdbnp78
சீனாவுக்கு சென்றதன் காரணம் என்ன?
“பிரதமரின் சீன பயணம் பல உத்தி சார்ந்த ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ஆனால் எனது பார்வையில், இந்தப் பயணத்தின் பின்னணியில் உள்ள காரணம் ஏதோ ஒரு பெரிய உலக அரசியல் நாடகம் அல்ல, மாறாக மிகவும் நடைமுறையான மற்றும் உடனடியான ஒன்று. அது நமது உள்நாட்டு நிர்ப்பந்தங்கள் ஆகும்.
உண்மையில், எந்தவொரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையும் அதன் உள்நாட்டுத் தேவைகளால் தான் அதிகம் வடிவமைக்கப்படுகிறது; மேலும் நம்மைப் பொறுத்தவரை, இந்தத் தேவைகள் வியூக ரீதியானவை என்பதை விட பொருளாதார ரீதியானவையே” என ஹுமாயூன் கபீர் குறிப்பிட்டுள்ளார்.
“வங்கதேசத்தின் முன்னுரிமைகள் மூன்று முக்கியத் தேவைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. முதலாவதாக நிதி உதவி. பொருளாதாரம் பலவீனமான நிலையில் உள்ளது, இத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு அரசாங்கமும் அதன் நெருங்கிய கூட்டாளிகளை எதிர்பார்க்கிறது. இந்தச் சூழலில் சமீபத்திய வரலாறு மிகவும் முக்கியமானது” என்றும் ஹுமாயூன் கபீர் அதில் கூறியுள்ளார்.
“2024 ஆம் ஆண்டில், அன்றைய பிரதமர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு தோராயமாக ஐந்து பில்லியன் டாலர் உதவி கோரினார். இருப்பினும், சீனா இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. சீனாவின் கூற்றுப்படி, அப்போதைய பொருளாதார நிலைமைகள் இத்தகைய உதவிக்கு உகந்ததாக இல்லை. இதன் விளைவாக, அந்தப் பயணம் ஒப்பீட்டளவில் ஏமாற்றமளிப்பதாக அமைந்தது.”
” வங்கதேசம் சீனாவை நோக்கிச் சாய்கிறது அல்லது அதிலிருந்து விலகிச் செல்கிறது என்பதல்ல இதன் பொருள்.
வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கும் அவற்றை திறம்படப் பயன்படுத்துவதற்கும் நமது திறனை விரைவாக வலுப்படுத்துவதே உண்மையான தேவையாகும். இதற்கு அர்த்தமுள்ள சீர்திருத்தங்களும் வலுவான நிறுவனங்களும் தேவைப்படுகின்றன. உள்நாட்டில் இந்தத் தயாரிப்பு இல்லாத பட்சத்தில், சீனா, இந்தியா அல்லது அமெரிக்கா என யாருடன் ஒப்பந்தம் செய்தாலும், அதன் முழுத் திறனையும் வழங்க முடியாது” என்றும் ஹுமாயூன் கபீர் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தாரிக் ரஹ்மான் பிரதமரான பிறகு இந்தியாவுடனான உறவுகளில் மீண்டும் நம்பிக்கை உருவாகியுள்ளதா என்ற கேள்விக்கு நிரூபமா சுப்பிரமணியன் பதிலளிக்கையில், “முகமது யூனுஸ் காலத்தில் இருந்த சொல்லாடல்கள் இப்போது இல்லை, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பல சிக்கல்கள் உள்ளன” என்று கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு