• Sun. Aug 23rd, 2026

24×7 Live News

Apdin News

வடக்கு கிழக்கில் இராணுவம் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள் | பிரதமரிடம் யாழில் மஜகர்

Byadmin

Aug 23, 2026


வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள் குரல் அமைப்பினர் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து பிரதமர் ஹரிணி அமர சூரியவிடம் காணி விடுவிப்பு தொடர்பான மஜகரை  சனிக்கிழமை (22) கையளித்தனர்.

அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்பின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ,

யாழ் மாவட்ட செயலகத்தில் இலங்கையின் பிரதமர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் , நிகழ்வு நிறைவடைந்த பின்னர் சந்தித்து பேசினோம்.

வடக்கு–கிழக்கு பகுதிகளில் தமது பூர்வீகக் காணிகளை இழந்து, நீண்டகாலமாக அவற்றை மீட்டெடுப்பதற்காக வீதி வீதியாக போராடுகிறார்கள்.

யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலி ,வசாவிளான் , மயிலிட்டி பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு கேப்பாப்புலவு , மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு ,மாதவனை உள்ளிட்ட வடக்கு–கிழக்கு பகுதிகளில் காணி உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடிவருகிறார்கள்.

கடந்த அரசாங்கங்களின் காலப்பகுதிகளில் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமல், மக்கள் தொடர்ச்சியாக காலதாமதத்திற்கும் புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகவே இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்த மக்களுக்கு, ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு முழுமையானதும் நீதியானதுமான தீர்வு கிடைக்காத நிலை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் நீண்டகாலப் போராட்டத்தையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வை வழங்க வேண்டுமென பிரதமர் அவர்களிடம் வலியுறுத்தினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், காணி இழந்த மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நீண்டகாலப் போராட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மகஜர் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

By admin