• Fri. May 8th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் மீண்டும் மறுப்பு

Byadmin

May 8, 2026


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆளுநர் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மீண்டும் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த விஜய்யிடம்.. ”113 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உங்களிடம் இருக்கிறது.  வேறு எந்த கட்சிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்” என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாகவும்,  118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் தமிழகத்தில் புதிய அரசு ஏற்படுவதற்கான குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.

இதனிடையே பதவி ஏற்பு விழாவிற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த புணரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் விஜய் வீட்டிற்கு செல்லும் வழியில் காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த பாதுகாப்பு தடுப்புகளும் அகற்றப்பட்டு இருக்கிறது. அத்துடன் விஜய் வீட்டில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் எனும் கருவியும் அகற்றப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன் உடன்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி ஆதரவு கோரி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவன்-  திமுக கூட்டணியின் தலைவரான மு க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் திமுகவின் மூத்த தலைவர்களான டி ஆர் பாலு- கனிமொழி- உதயநிதி ஸ்டாலின்- ஆகியோர் பங்கு பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழக மாநில செயலாளரான வீரபாண்டியன், ‘அதிக அளவில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பினை ஆளுநர் தர வேண்டும் என்றும், முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும் என்றும், அதன் பிறகு சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  இதற்காக அவர் பல இந்திய மாநிலங்களில் இது போன்ற நெருக்கடியின் போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் என்றும் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு திமுக வெளியிலிருந்து ஆதரவளிக்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் தனி இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் கட்சியை தவிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கான அதிகாரப்பூர்வமான ஆதரவை அறிவித்தவுடன் விஜய் முதல்வராக பதவியேற்க கூடும் என்பதால் இவர்களின் ஆதரவுக்காக தமிழக வெற்றிக்கழகம் காத்திருக்கிறது.

அதே தருணத்தில் ஆளுநரின் இந்த செயல்பாடு மற்றும் அணுகு முறையை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததால்… ஆத்திரமடைந்திருக்கும் பாஜக- ஆளுநர் மூலமாக அவரை முதலமைச்சராக பதவி ஏற்க விடாமல் ‌ சட்டரீதியான இடையூறுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

By admin