படக்குறிப்பு, முதலமைச்சர் விஜய் திமுக மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். கட்டுரை தகவல்
முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை (செப்டம்பர் 7) சட்டப்பேரவையில் பேசியதன் மூலம் 1970களில் இருந்து இன்று வரை தமிழ்நாட்டு அரசியலில் இடம்பெறும் விவாதப்பொருள் ஒன்று மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுதான் சர்க்காரியா ஆணையம். திமுக ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். எஸ்.சர்க்காரியா தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தை இது குறிக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை உரையாற்றினார். தனது உரையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
அப்போது, சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகள் எனக் கூறி பேசிய முதலமைச்சர் விஜய், “1970களில் ‘ஒரு நிறுவனத்துக்கு’ வீராணத்துக்கு குழாய்கள் பதிக்கும் திட்டத்துக்கு டெண்டர் கொடுத்தது குறித்து” குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எம்ஜிஆர், அதற்குப் பிறகு ஜெயலலிதா என அதிமுக ஆட்சிக் காலங்களில் திமுக மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுள் சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை அவ்வப்போது இடம்பெறும். தற்போது விஜயின் ஆட்சிக் காலத்திலும் இது முக்கியமாக பேசப்படுகிறது.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளான நிலையிலும் இன்றும் பேசப்படும் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? அதில் தெரியவந்தது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி
சர்க்காரியா ஆணையத்தின் பின்னணி
1967 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸை தோற்கடித்து முதன்முறையாக திமுக ஆட்சியைப் பிடித்து, அண்ணாதுரை முதலமைச்சரானார். ஆனால், 2 ஆண்டுகளிலேயே அண்ணாதுரை உடல்நலக்குறைவால் இறந்துவிட பின்னர் கருணாநிதி முதலமைச்சரானார்.
ஆனால், “சோஷலிச – மதச்சார்பற்ற கொள்கைகளை – செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடமிருந்து புதிய கட்டளைகளைப் பெற” சட்டப்பேரவையைக் கலைப்பதாக தி.மு.க. ஆளுநரிடம் தெரிவித்தது. 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை கலைக்கப்பட்டு முன்கூட்டியே தேர்தல் நடந்தது.
அதன்படி, 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று கருணாநிதி மீண்டும் முதலமைச்சரனார்.
இந்நிலையில், கருணாநிதிக்கும் திமுகவின் பொருளாளராக இருந்த எம்ஜிஆருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், 1972-ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கினார். அதன்பின், திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார் மனுவை அப்போதைய ஆளுநர் கே.கே. ஷாவிடம் அளித்தார்.
“ஆரம்பத்தில் எம்ஜிஆர் தன்னிடம் அளித்த புகார்கள் மீது ஆளுநர் கே.கே. ஷா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன். இதையடுத்து, எம்ஜிஆர் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் திமுக அரசுக்கு எதிரான மனுக்களை சமர்ப்பித்தார்.
இதையடுத்து, “எம்ஜிஆரின் அரசியல் கூட்டாளியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான எம். கல்யாணசுந்தரம், திமுகவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேலும் இரண்டு மனுக்களைச் சமர்ப்பித்தார் என, மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தன்னுடைய ‘ஒய் ஸ்கேம்ஸ் ஆர் ஹியர் டூ ஸ்டே: அண்டர்ஸ்டாண்டிங் கரப்ஷன் இன் இந்தியா எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் என்.ராம்
அக்காலக்கட்டத்தில் ஆளுநர் கே.கே.ஷாவுக்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கும் இடையேயான உறவு குறித்து பரவலாக பேசப்பட்டது.
தி இந்து ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையொன்றில், கே.கே. ஷா சில சந்தர்ப்பங்களில் கருணாநிதியை புகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கே.கே. ஷாவின் 65வது பிறந்த நாளை குறிக்கும் விதமாக 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஏழை மாணவர்களுக்கான விடுதி ஒன்று அமைக்கப்படும் என, கருணாநிதி அறிவித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
“கே.கே. ஷா என்பதை கலைஞர் கருணாநிதி ஷா என்று கூட சொல்லலாம் ” என கே.கே. ஷா கூறியதாக தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.
ஆனால், 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதே கே.கே. ஷா தான், அவசர காலகட்டத்தின்போது, கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைத்தார். அதன்படியே, ஜனவரி 31-ஆம் தேதி கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது.
“ஆட்சி கலைக்கப்பட்ட சில நாட்களிலேயே திமுக ஆட்சியில் எழுப்பப்பட்ட 28 ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அடங்கிய புகார்கள் மீது விசாரிக்க ஆர்.எஸ். சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டதாக,” தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார் என்.ராம்.
அறிக்கை என்ன கூறுகிறது?
வீராணம் ஏரி மட்டுமல்லாமல், வான்வழி மருந்து தெளித்தல் ஒப்பந்தம், சமயநல்லூர் மின் நிலையம் விற்பனை, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் நெல் கொள்முதல் என பல புகார்கள் குறித்து அந்த ஆணையம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை ஓராண்டுக்கும் மேலாக நடந்ததாக குறிப்பிடுகிறார் பத்திரிகையாளர் மாலன் நாராயணன். நான்கு தொகுதிகளை கொண்ட விரிவான அறிக்கையாக இது உள்ளது.
அக்குற்றச்சாட்டுகளை திமுக மறுத்ததாகவும் புகார்களை அளித்தவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாகவும் மாலன் நாராயணன் தெரிவிக்கிறார்.
“அறிக்கை வெளியான பிறகு குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்னவெல்லாம் நடந்திருக்கின்றன என அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. தங்களுடைய கருத்துகளை கேட்கவில்லை என்றும், அறிக்கை ஒருதலைபட்சமாக இருப்பதாகவும் திமுக கூறியது.” என்றார்.
“1977- ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய தினங்களில் சமர்ப்பிக்கப்பட்ட தனது முதல் அறிக்கையில், சர்க்காரியா விசாரணை ஆணையம் தான் விசாரித்த ஏழு குற்றச்சாட்டுகளில் ஆறு குற்றச்சாட்டுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கும் நிலையில் இருந்த இந்திரா காந்தி அரசு, கருணாநிதி மற்றும் அவரது சகாக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.” என என். ராம் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆணையத்தின் இறுதி அறிக்கைகள் நான்கு தொகுதிகளாக இறுதியில் வெளியிடப்பட்டபோது, அவை எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றும், மீதமிருந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றுக்கு ஆதாரம் இல்லை என முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Malan Narayanan/Facebook
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன்
‘விஞ்ஞான ஊழல்’ விமர்சனம்
ஆனால், சர்க்காரியா ஆணையம் என்பது விசாரணை ஆணையம் தானே தவிர, புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அதற்கு இல்லை.
“மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவசர காலகட்டத்துக்குப் பிறகு திமுகவும் காங்கிரஸும் மீண்டும் இணைந்ததால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.” என்கிறார் பத்திரிகையாளர் மாலன்.
“1972-ஆம் ஆண்டிலேயே திமுக ஆட்சிக்கு எதிராக எம்ஜிஆர் புகாரளிக்கிறார். ஆனால், 1976-ஆம் ஆண்டில் அவசர நிலையின் போதுதான் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது. தாமதமாக இந்த ஆணையம் அமைக்கப்பட்டது குறித்து அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது.” என குறிப்பிடுகிறார் பத்திரிகையாளர் சிகாமணி.
அந்த அறிக்கையில் திமுக “நிரூபிக்கப்பட முடியாத அளவுக்கு விஞ்ஞான ஊழல்” செய்திருப்பதாக கூறியதாக பரவலாக பேசப்படுகிறது. ஆனால், “விஞ்ஞானபூர்வ ஊழல் என்பது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. பின்னாளில் ஜெயலலிதா அதை பயன்படுத்தத் தொடங்கினார்.” என்கிறார் பத்திரிகையாளர் மாலன் நாராயணன்.
சர்க்காரியா ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பது திமுகவின் வாதமாக உள்ளது.
“சர்க்காரியா ஆணையமும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவையும் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அது தற்போது வரலாற்றுபூர்வ ஆவணம் மட்டுமே” என்கிறார் மாலன் நாராயணன்.
திமுக கூறுவது என்ன?
விஜய் சட்டப்பேரவையில் பேசியது குறித்து கருத்து கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி, “‘எமர்ஜென்சி நேரத்தில் எனக்கும் தெரியாமல் சில தவறுகள் நடந்துவிட்டன’ என்று 1980ல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கருணாநிதி முன்னிலையிலேயே இந்திரா காந்தி தெரிவித்தார்” என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு செய்தியாளர் சந்திப்பு மூலம் விளக்கமளித்த ஆர். எஸ் பாரதி, “தமிழ்நாட்டில் 110 நாட்களாக நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன, அதுகுறித்து பதிலளிக்காத முதலமைச்சர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து பேசியுள்ளார்” என்று தெரிவித்தார்.
“சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட போது எமர்ஜென்சி காலம், பேச்சுரிமையோ, எழுத்துரிமையோ இல்லை, சொல்லும் செய்தியோ, மறுப்போ பத்திரிகைகளில் வராது” என்று ஆர். எஸ் பாரதி கூறினார்.
மேலும் பேசிய அவர், “எமர்ஜென்சியின் போது எனக்கும் தெரியாமல் சில தவறுகள் நடந்துவிட்டது என்பதை எமர்ஜென்சி அமல்படுத்திய இந்திரா காந்தியே கருணாநிதி முன்னிலையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.” என்றார்.
“அரசியல் ஊழலை வெளிக்கொணர்ந்து எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவதற்குப் பதிலாக, சர்க்காரியா ஆணையத்தின் செயல்பாடுகள், முறையான ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையையே சீர்குலைத்தன. குறிப்பாக, விசாரணை ஆணையங்கள் அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.” என்று தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்.ராம்.
தமிழ்நாட்டில் இன்று வரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆர்.எஸ். சர்க்காரியா, பின்னாளில் மத்திய – மாநில உறவுகளை மேம்படுத்தும் வகையிலான பரிந்துரைகளை அளிப்பதற்காக மத்திய அரசு 1980களில் அமைத்த ஆணையத்துக்கும் தலைமை தாங்கியிருந்தார்.