மத்திய டெக்சாஸ் வயல்வெளி ஒன்றில் புதன்கிழமையன்று ராணுவத்தின் அபாச்சி தாக்குதல் ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். மேலும், இதனால் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பல வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர் என ஷெரிப் அதிகாரி தெரிவித்தார்.
அருகில் உள்ள ஃபோர்ட் ஹூட் அதிகாரிகள், ஏ.எச். 64 அபாச்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அறிவித்தனர். பெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கிளிஃப் கோல்மன், அதில் இருந்த இருவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
விசாரணை தீவிரம்:
விபத்துக்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. ஃபோர்ட் ஹூட்டின் குற்றப் புலனாய்வுப் பிரிவு விபத்து விசாரணையை முன்னெடுத்து வருவதாக கோல்மன் தெரிவித்தார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது எந்த வீடுகளின் மீதோ அல்லது பிற கட்டிடங்களின் மீதோ மோதவில்லை என்று கோல்மன் கூறினார்.
அது ஒரு பயங்கரமான விபத்து என்பதைப் பார்க்க முடிந்தது, என்று கோல்மன் கூறினார்.
“அந்த இடத்தைப் பாதுகாப்பதும், முதற்கட்ட மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுமே எங்களின் உடனடி முன்னுரிமையாகும்,” என்று தற்காலிகத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ஈதன் டைவன் கூறினார். “மேலதிக தகவல்களுக்காக நாங்கள் காத்திருக்கும் வேளையில், எங்கள் எண்ணங்கள் மீட்புக் குழுவினருடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன.”
கட்டுக்கடங்காத தீ:
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் ஃபோர்ட் ஹுட் (Fort Hood) தளத்தை மையமாக கொண்டது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இருவர் அமரக்கூடிய வகையை சேர்ந்தவை.
உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 மணிக்குப்பிறகு, ஹெலிகாப்டர் விபத்து குறித்த ‘911’ அவசர அழைப்பு ஒன்று தங்களுக்கு வந்ததாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்தது. இந்த விபத்தினால் புல்வெளியில் தீப்பிடித்தது; ஷெரிப் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோது அந்தத் தீ “கட்டுக்கடங்காத” நிலையில் இருந்தது.