செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றத்தின் மூலம், இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்தும் முறை முழுமையாகக் கைவிடப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகமான BOI இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.,
காரணம்
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகள் Immigration சோதனையின் போது தங்கள் காகித போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்திக் கொள்ளும் நடைமுறை தலைவலியாக இருந்து வந்தது.
சில போர்டிங் பாஸ்களில் தவறான அல்லது தெளிவற்ற முறையில் முத்திரை குத்தப்படுவதால், பார்கோடு போன்ற விவரங்களைப் படிப்பதில் இயந்திரங்களுக்கு பிழைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டன
இதனால் பயணிகள் அசௌகரியத்தை சந்தித்து வந்ததாலும் சீல் வைப்பதால் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தவறுகளைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
பயணிகள் இனி காகித போர்டிங் பாஸ் மட்டுமல்லாது தங்கள் ஸ்மார்ட்போன்களில் மின்னணு முறையிலான போர்டிங் பாஸ்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் விமான நிலையப் பயணம் எளிதாகும்.
ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தற்போது இ போர்டிங் பாஸ்களை வழங்குவதால், ஒட்டுமொத்தப் பயணத்தையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றுவது எளிதாகிறது.
அப்படி, செப்டம்பர் 1 முதல் காகித போர்டிங் பாஸ்களைப் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தினாலும், அதில் குடியேற்றத் துறை அதிகாரிகளால் இனி எந்த முத்திரையும் குத்தப்படாது.
தனிநபர் உடற்பரிசோதனையின் போதும் போர்டிங் பாஸ்களில் சீல் வைக்கும் நடைமுறை ஏற்கனவே கைவிடப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
பாஸ்போர்ட்
போர்டிங் பாஸ் சீல் ரத்து செய்யப்படுவதைத் தொடர்ந்து, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பாஸ்போர்ட்டில் வைக்கப்படும் Immigration Entry மற்றும் Exit முத்திரையையும் முழுமையாக நீக்குவதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன.