16
இங்கிலாந்து மாணவன் ஹென்றி நோவாக் (Henry Nowak) கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்த கருத்துகள், இங்கிலாந்து ஜனநாயகத்தில் தலையிடுவதாகவும், பிரிவினையைத் தூண்டுவதாகவும் உள்ளதாக இங்கிலாந்து அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சவுத்தாம்ப்டனில் 18 வயதான மாணவர் ஹென்றி நோவாக், விக்ரம் டிக்வா என்பவரால் குத்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஜே.டி. வான்ஸ், நோவாக்கின் மரணத்திற்கு “குடியேறிகளின் பெருமளவிலான ஊடுருவல்” மற்றும் ஐரோப்பிய உயரடுக்கினரின் “சுய-வெறுப்பு அரசியல்” தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், நோவாக் கொல்லப்பட்ட விதம் ஒரு “நாகரிகம் அழியும் விதத்தைப் போன்றது” என்றும் அவர் விமர்சித்தார்.
வான்ஸின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த இங்கிலாந்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர், “மிகவும் மோசமான சூழ்நிலையிலும் மக்களை ஒன்றிணைப்பதே எங்கள் நாட்டின் அரசியல்” என்று கூறினார். ஹென்றி நோவாக்கின் குடும்பத்தினர், அவரது மரணத்தைப் பிரிவினையை உருவாக்கப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதையும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அமைச்சர் ஜோஷ் மெக்அலிஸ்டர் கூறுகையில், “நச்சுத்தன்மை வாய்ந்த அரசியலை இங்கிலாந்துக்குள் இறக்குமதி செய்ய முயற்சிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகளின் அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை” என்று சாடினார்.
தொடர்புடைய செய்தி : மாணவன் ஹென்றி மரணம் குறித்த வன்முறையில் 11 பொலிஸார் காயம்; இருவர் கைது!
ஹென்றி நோவாக்கை 21 செமீ நீளமுள்ள கத்தியால் குத்திக் கொன்ற விக்ரம் டிக்வாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விக்ரம் டிக்வா இங்கிலாந்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோவாக் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, பொலிஸார் அவருக்கு கைவிலங்கு போட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பொலிஸாரின் நடத்தை பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.
எலான் மஸ்க் மற்றும் இங்கிலாந்து அரசியல் தலைவரான நைஜல் ஃபரேஜ் ஆகியோரும் இச்சம்பவம் குறித்து பொலிஸை விமர்சித்துள்ளனர். இத்தகைய கருத்துகள் பிரிவினையைத் தூண்டுவதாக பிரதமர் கீர் ஸ்டார்மர் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி : இங்கிலாந்து அரசியலில் பிளவை ஏற்படுத்த எலோன் மஸ்க் முயற்சிக்கிறார்: பிரதமர் பகிரங்க குற்றச்சாட்டு!
தற்போது, இங்கிலாந்து அரசு இந்த விவகாரத்தில் மேலும் அரசியல் ரீதியான பதற்றம் உருவாவதைத் தவிர்க்கும் வகையில் வான்ஸின் கருத்துகளுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது.