26
ஒரு மில்லியன் பவுண்டுகள் லொத்தர் வென்று பிரபலமான நபரொருவர், இங்கிலாந்தின் எசெக்ஸ் (Essex) மாகாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 21ஆம் திகதி அதிகாலை சுமார் 6.30 மணியளவில் டிப்ட்ரீ (Tiptree) பகுதியில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது கறுப்பு நிற Ford Ka ரக கார் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அந்த நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், மருத்துவர்களின் தீவிர முயற்சிகளையும் மீறி, நான்கு நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.
விசாரணைகளின் பின்னர் உயிரிழந்தவர் 39 வயதுடைய அந்தோனி கான்டி (Anthony Canty) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுலில் இருந்த காலகட்டத்தில், பஸ்ஸில் மாரடைப்பால் மயங்கி விழுந்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடியாக CPR முதலுதவி அளித்து, அவரது உயிரைக் காப்பாற்றிய சம்பவத்தால், இங்கிலாந்து முழுவதும் அந்தோனி கான்டி கவனம் பெற்றிருந்தார். அவரது மனிதநேய செயல் பல ஊடகங்களில் பாராட்டப்பட்டதுடன், “ஹீரோ” எனவும் போற்றப்பட்டார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்ற சில வாரங்களிலேயே, 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற EuroMillions லொத்தர் குலுக்கலில் அவருக்கு 1 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்தது. லொத்தர் வெற்றியால் வாழ்க்கை மாறினாலும், “எனது வழக்கமான வேலையை நான் தொடர்வேன்” என அவர் அப்போது தெரிவித்திருந்தார். அவரது எளிமையான அணுகுமுறை பலரது பாராட்டைப் பெற்றிருந்தது.
இதற்கிடையில், விபத்து இடம்பெற்ற Maldon வீதியில் இருந்து சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாகனம் நிறுத்தப்படாமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்தவர்கள் அல்லது சம்பவத்தை நேரில் கண்டவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.