11
20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 18 வீர, வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
ஜப்பானின் நகோயா நகரில் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கை தேசிய விளையாட்டு அணியினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.
25 விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கிய இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 18 வீர, வீராங்கனைகள் உட்பட மொத்தம் 156 இலங்கை வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இம்முறை ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை அணியின் பிரதான குழுத் தலைவராக (Chef de Mission) இலங்கை விமானப்படையின் குரூப் கெப்டன் எரந்த கீகனகே செயற்படவுள்ளார்.
தற்போது இலங்கை விமானப்படை விளையாட்டுக் குழுவின் செயலாளராகவும், இலங்கை ஸ்குவாஷ் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வரும் குரூப் கெப்டன் எரந்த கீகனகே, சர்வதேச இராணுவ விளையாட்டுக் கவுன்சிலின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டுத் துறையில் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார்.
அதேவேளை, ஈட்டி எறிதலில் உலக சாம்பியனான இலங்கை விமானப்படை வீரர் சார்ஜன்ட் ருமேஷ் தரங்க இம்முறை இலங்கை தேசிய விளையாட்டு அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஆசிய விளையாட்டு விழாவின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவம், இலங்கை விமானப்படையின் பென்டத்லெட் (Pentathlon) வீரரான ஃப்ளையிங் ஆபிசர் இசிவரன் டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.