0
ரஷ்யா 2029ஆம் ஆண்டிற்குள் நேட்டோ உறுப்பு நாடுகளை ஆக்கிரமிக்கும் அளவுக்கு இராணுவ திறனைப் பெற்றிருக்கக்கூடும் என ஜெர்மன் இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் கிறிஸ்டியன் பிராய்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய உலக பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜெர்மனி தனது பாதுகாப்பு மற்றும் இராணுவ முதலீடுகளை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ரஷ்யாவின் நடவடிக்கைகள் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருவதால், பல தசாப்தங்களாக இல்லாத அளவிற்கு மிகவும் ஆபத்தான பாதுகாப்பு சூழ்நிலையை இங்கிலாந்தும் ஐரோப்பிய நாடுகளும் எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: ‘2030க்குள் நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்’ – இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை!
மேலும், ரஷ்யா நேட்டோ எல்லைப் பகுதிகளுக்கு அருகில் தனது இராணுவ செயற்பாடுகளை கணிசமாக அதிகரித்து வருவதாக மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, பின்லாந்து, நோர்வே மற்றும் பால்டிக் நாடுகளுக்கு அண்மைய பகுதிகளில் ரஷ்ய படைகளின் நகர்வுகள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், எதிர்காலத்தில் ரஷ்யாவின் கவனம் பின்லாந்து, நோர்வே மற்றும் பால்டிக் பிராந்திய நாடுகள் மீது திரும்பக்கூடும் என்ற அச்சமும் மேற்கத்திய பாதுகாப்பு வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதன் காரணமாக, நேட்டோ உறுப்பு நாடுகள் தங்களது பாதுகாப்பு தயார்நிலையை மேலும் வலுப்படுத்தி வருகின்றன.
உக்ரைன் போரால் ஏற்கெனவே ஐரோப்பிய பாதுகாப்பு சூழல் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியாகும் இந்த எச்சரிக்கைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.