• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம சென்னை: வளர்ப்பு அன்னையைக் காக்க நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!

Byadmin

Aug 22, 2026


தமிழ்நாட்டின் தலைநகரமும், தென்னிந்தியாவின் முதன்மைப் பெருநகரமுமான சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையிலேயே ஆண்டுதோறும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர் மற்றும் பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களிடம் இருந்து நிலத்தை வாங்கி நகரை உருவாக்க அடித்தளமிட்டார். இச்சகோதரர்களின் தந்தையான சென்னப்ப நாயக்கரின் நினைவாகவே இம்மாநகரம் ‘சென்னை‘ என்று பெயரிடப்பட்டது.

தோற்றமும் வளர்ச்சியும்

முன்னணிப் பத்திரிகையாளர்களான சசி நாயர், வின்சண்ட் டி சொஸா மற்றும் முத்தையா ஆகிய மூவரின் சிந்தனையில் உதித்து, 2004 ஆம் ஆண்டு முதல் இந்நாள் சிறப்பாக நினைவுகூரப்பட்டு வருகிறது.

chennai central

தொடக்கத்தில் சில கருப்பு-வெள்ளைப் புகைப்படக் கண்காட்சிகளுடன் எளிய முறையில் தொடங்கப்பட்ட இக்கொண்டாட்டம், இன்று புகைப்படக் கண்காட்சிகள், பிரம்மாண்ட உணவுத் திருவிழாக்கள், பாரம்பரிய நடைப்பயணங்கள் மற்றும் மாரத்தான் ஓட்டங்கள் எனப் பல பரிமாணங்களில் நகரின் மூலைமுடுக்கெல்லாம் விமரிசையாகக் கொண்டாடப்படும் மக்கள் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.

நம்ம சென்னையின் பெருமைமிக்க வரலாறு

வாழ்வு தேடி வந்த கோடிக்கணக்கான மக்களைத் தன் மடியில் ஏந்தி, வாழ்வாதாரம் அளித்து பேணிக்காக்கும் தாயாகத் திகழ்கிறது சென்னை மாநகரம். இந்தியாவின் நான்கு முக்கிய பெருநகரங்களில் ஒன்றான சென்னை, இன்று தனது 387-வது பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடுகிறது.

மதராசப்பட்டணம், மெட்ராஸ் எனக் காலப்போக்கில் உருமாறி இன்று அதிநவீன தொழிற்கேந்திரமாக வளர்ந்து நிற்கும் இம்மாநகரம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பழமையான வரலாற்றுப் பண்பாட்டு அடையாளங்களையும், அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஒருங்கே கொண்டு கம்பீரமாக விளங்குகிறது.

நகரக் கட்டமைப்பு

வானுயர்ந்த கட்டிடங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், முன்னணி கல்வி நிறுவனங்கள் எனச் சென்னை அடைந்துள்ள வளர்ச்சி பிரம்மாண்டமானது. இருப்பினும், நகரக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாகப் பல கடுமையான நெருக்கடிகளை இம்மாநகரம் எதிர்கொண்டு வருகிறது. ஒரு மாநகரத்தின் செழுமையைக் குறிக்கும் முக்கிய அடையாளங்களான நீர்வழித்தடங்களும் நிலவழித்தடங்களும் இன்று பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

1935-ஆம் ஆண்டு வரை கண்ணாடி போலத் தெளிந்த நீரைக் கொண்டிருந்த கூவம், அடையாறு ஆறுகளும் பக்கிங்காம் கால்வாயும் இன்று கழிவுநீர் செல்லும் வழிகளாக மாறிப்போயின.

மற்றொரு புறம், நகரின் பல பகுதிகளில் முறையற்ற ஆக்கிரமிப்புகளால் சாலைகள் சுருங்கி, வாகனப் பெருக்கத்தின் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் அன்றாடப் பிரச்சனையாக மாறியுள்ளது. மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்வதும், கோடையில் குடிநீருக்கு லாரிகளை நம்பி நிற்கும் அவலமும் தொடர்கிறது.

எதிர்காலத் தேவைகள்

சென்னை மாநகரத்தை வாழத் தகுதியுள்ள உயிர்ப்பான நகரமாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல உடனடியாகப் பல கட்டமைப்பு மாற்றங்கள் தேவையாகின்றன. ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளையும் நீர்வழிப்பாதைகளையும் மீட்டெடுத்து, கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதே முதன்மைப் பணியாகும். நகரின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி நிவாரணம் காண முடியும்.

அத்துடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் பசுமைப் போர்வையை அதிகரிப்பது அவசியமாகிறது.

அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தாலும், மக்களின் பங்களிப்பும் விழிப்புணர்வும் இன்றி முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.

பிறந்த நாளில் நாம் அனைவரும் ஏற்க வேண்டிய உறுதிமொழி

பெற்றெடுத்த தாயைப் போற்றிப் பாதுகாப்பதைப் போல, நமக்கு வாழ்வளித்த வளர்ப்பு அன்னையான சென்னை மாநகரையும் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் முதன்மையான கடமையாகும். இந்த 387-வது பிறந்தநாளில் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், கீழ்க்கண்ட உறுதிமொழிகளை நாம் அனைவரும் மனதார ஏற்போம்:

* நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளையோ நெகிழிப் பொருட்களையோ எறியாமல் நகரைத் தூய்மையாக வைப்போம்.

* இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், வெள்ள அபாயங்களைத் தடுக்கவும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க மாட்டோம்.

* சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றி, ஆக்கிரமிப்புகளைத் தவிர்த்துப் போக்குவரத்து சீராக இயங்க ஒத்துழைப்போம்.

* அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்துச் சிங்காரச் சென்னையின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

By admin