நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பாக ஈரானுடன் “மிகவும் நேர்மறையான பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இருப்பினும், தடைபட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை அமெரிக்கா விரைவில் தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகெய், “போரை முடிவுக்கு கொண்டுவருவதை மையமாக கொண்ட” 14 அம்சத் திட்டத்தை தெஹ்ரான் சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கு வாஷிங்டன் பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களுக்கு அனுப்பிய செய்தியில் பதிலளித்துள்ளதாகவும் அரசு தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.
“எனது பிரதிநிதிகள் ஈரான் நாட்டுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதையும், இந்த பேச்சுவார்த்தைகள் அனைவருக்கும் மிகவும் சாதகமான முடிவு காண வழிவகுக்கும் என்பதையும் நான் முழுமையாக அறிவேன்,” என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் கூறினார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை தொடுத்து, இஸ்லாமிய குடியரசின் உச்ச தலைவரை கொன்றது. இதற்கு பதிலடியாக, தெஹ்ரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
ஏப்ரல் 8-ஆம் தேதியன்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது; அன்று முதல் இஸ்லாமாபாத்தில் ஒரு சுற்று நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன, ஆனால் இரு நாடுகளும் எந்த உடன்பாடும் எட்டாக்கனியாகவே உள்ளன.