பட மூலாதாரம், Rockhampton Regional Council
-
- எழுதியவர், சைமன் அட்கின்சன்
- பதவி, குயின்ஸ்லாந்து
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பள்ளிகளுக்கான படகோட்டப் போட்டி (ரோயிங் ரெகாட்டா) பொதுவாக அதிக கவனத்தை ஈர்க்காது.
ஆனால் இந்த வார இறுதியில், மாகாணத்தின் மிகவும் திறமையான 600-க்கும் மேற்பட்ட படகோட்ட வீரர்கள், ராக்ஹாம்ப்டன் நகரின் முதலைகள் வாழும் ஃபிட்ஸ்ராய் நதியில் போட்டியிடுகின்றனர்.
“இதற்கு முன்பு எப்போதும் எந்த ஊடகமும் இங்கு வர விரும்பியதில்லை,” என்று ரோயிங் குயின்ஸ்லாந்தின் தலைவர் ஆன்தியா ஓ’லாஃப்லின் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால் இந்த ஆண்டு நிலைமையே வேறுபட்டது. இன்னும் ஆறு ஆண்டுகளில் நடைபெறவுள்ள 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் படகோட்டம் மற்றும் கேனோ ஸ்பிரிண்ட் போட்டிகள் நடைபெறவிருக்கும் இடமாக இந்த நதிப் பகுதி தேர்வாகியுள்ளது. இது விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பானதும் போட்டிக்குத் தகுதியானதுமான இடம் என தொழில்நுட்ப மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நதியில் உவர்நீர் முதலைகளை காண்பது அரிதல்ல. அவற்றின் எண்ணிக்கை சுமார் 500 ஆகவும், அவை நான்கு மீட்டர் (13 அடி) வரை வளரக்கூடியவையாகவும் உள்ளன. எனினும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான மாகாண அரசின் பதிவுகளின்படி, இந்தப் பகுதியில் முதலைகள் மனிதர்களைத் தாக்கிய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை.
ஆம்ஸ்டர்டாமில் கடந்த மாதம் நடைபெற்ற உலக ரோயிங் மாநாட்டில் சில முக்கிய நிர்வாகிகள் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது குறிப்பிட்டிருந்தாலும், முதலைகளின் இருப்பே அவர்களின் முக்கிய கவலையாக இருக்கவில்லை.
பட மூலாதாரம், Rockhampton Regional Council
“நியாயமான போட்டி” என்பதுதான் பிரிட்டிஷ் ரோயிங்கின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் சோல்ஸ்பரியிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கேள்வியாக இருந்தது. நதியின் இயற்கையான வளைவுகள் மற்றும் அலைச்சல்களால் உருவாகும் நீரோட்டங்களால், உயர்மட்ட போட்டிகளுக்கு அது பொருத்தமற்றதாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்காக மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற ட்ரூ கின், வெள்ள அபாயம் மற்றும் “நியாயம் மற்றும் போட்டியின் நேர்மை” குறித்து தமக்கு கவலை இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
“தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலிய விலங்குகளைக் குறித்து நான் பயப்படவில்லை. ஆனால் எனக்கு அருகில் ஒரு முதலை வந்ததில்லை,” என்றார் அவர்.
“அப்படி வந்தால் நான் இன்னும் வேகமாகப் படகோட்டுவேன்; மற்ற விளையாட்டு வீரர்களும் அப்படித்தான் செய்வார்கள். அது கவலைகளின் பட்டியலில் உள்ளது. ஆனால் அது முதலிடத்தில் இருக்கும் கவலை அல்ல. இருந்தாலும் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்ட ஒன்றாகும்.”
ஜெர்மன் ரோயிங் அமைப்பின் தலைவர் மோரிட்ஸ் பெட்ரி, பிரிஸ்பேனிலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் (373 மைல்) தொலைவில் இந்தப் போட்டியை நடத்துவது நிலைத்தன்மை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளதாக கூறினார்.
ஆனால் குயின்ஸ்லாந்தின் மிக மூத்த அரசியல்வாதியும் மாகாண பிரீமியருமான டேவிட் கிரிசாஃபுல்லி, “தடைகள் என்று சொல்லப்படுபவைகளை” சிறிதும் பொருட்படுத்தாமல் நிராகரித்ததோடு, மிகவும் காட்டமான மொழியிலும் சாடினார்.
“நாம் நேர்மையாக இருப்போம், ஆழமாக ஆராய்ந்து பார்த்து இது என்னவென்று வெளிப்படையாகவே சொல்வோம்,” என்று ஆம்ஸ்டர்டாம் கூட்டத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு அவர் கூறினார்.
“இது பிற மாகாணங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மேல்தட்டு மக்களின் குழுவாகும்; அவர்கள்குயின்ஸ்லாந்திற்கு செல்ல விரும்பாததால், தங்களின் வழியில் மிரட்டிப் பணியவைக்க முயல்கிறார்கள், இது சரியானதல்ல.”
வியாழக்கிழமை முடிவுக்கு முன்பாக பிபிசி-யால் தொடர்பு கொள்ளப்பட்ட ரோயிங் நிர்வாகத் தலைவர்கள், கிரிசாஃபுல்லியின் “மேல்தட்டு மக்கள்” (elites) என்ற கருத்து குறித்து நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் பெட்ரி மற்றும் ரோயிங் நியூசிலாந்தின் தலைமை நிர்வாகியான சைமன் விக்காம் ஆகிய இருவருமே, தங்களுடைய கவலைகள் பிராந்தியம் அல்லது நகர்ப்புற முன்னுரிமை சார்ந்தவை அல்ல என்றும், மாறாகப் போட்டியாளர்களுக்கு நியாயமான போட்டி கிடைப்பது பற்றியது மட்டுமே என்றும் கூறினர்.
“நான்கு ஆண்டு காலம் பயிற்சி செய்து, ஒவ்வொரு இரவும் ஒலிம்பிக் சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவுடன் வாழும் எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்தது எது என்பதே எங்கள் கவலை,” என்று பெட்ரி கூறினார்.
“மேல்தட்டு நிபுணத்துவம் என்பது 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமாக இருந்தால், அதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்” என கின் கூறினார்.
பட மூலாதாரம், Rockhampton Regional Council
முதலைகளோ, நீரோட்டமோ எதுவாக இருந்தாலும், இறுதியில் இந்த நதி பொருத்தமானதா என்பதை முடிவு செய்தது உலக ரோயிங் அமைப்பும் சர்வதேச ஒலிம்பிக் குழுவும்தான்.
வியாழக்கிழமை அவர்கள் இந்த இடத்தை அங்கீகரித்தனர். அதற்கு முன் ஒரு பொறியியல் நிறுவனம் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு ஆணையம் இணைந்து நதியின் படுகை, போட்டிப் பாதை, நீரோட்டங்கள், நீர்மட்டம் மற்றும் போட்டி காலத்தில் எதிர்பார்க்கப்படும் வானிலை நிலைமைகள் ஆகியவற்றை ஆய்வு செய்திருந்தன.
“விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் காலத்தில் ஃபிட்ஸ்ராய் நதியில் நியாயமான போட்டி சூழலை வழங்க இயலும் என்பதை இப்போது நாங்கள் அறிந்துள்ளோம்,” என்று உலக ரோயிங் அமைப்பின் தலைவர் ஜான்-கிரிஸ்டோஃப் ரோலன்ட் தெரிவித்தார்.
கேனோ ஸ்பிரிண்ட் வீரர்களுக்கும் இந்த நதி பொருத்தமானது என்ற “நம்பிக்கை” தற்போது ஏற்பட்டுள்ளதாக அந்த விளையாட்டின் உலக நிர்வாக அமைப்பான பேடில் வேர்ல்ட்வைட் தலைவரான தோமஸ் கோனிட்ஸ்கோ கூறினார்.
பிரீமியர் கிரிசாஃபுலி அதில் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். “ஃபிட்ஸ்ராய் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளது,” என்று மாகாண சட்டமன்றத்தில் அவர் கூறினார். “இது இப்போது அதிகாரப்பூர்வமானது. கையெழுத்திடப்பட்டு, உறுதிசெய்யப்பட்டு, முடிவடைந்துவிட்டது.”
ராக்ஹாம்ப்டனை ஆதரிப்பதன் மூலம், 2025-ல் தாங்களே நியமித்த ஆய்வறிக்கையின் பரிந்துரையை மாகாண அரசு புறக்கணித்தது. அந்த அறிக்கை இந்த இடம் பொருத்தமற்றது என்றும், 2000 சிட்னி ஒலிம்பிக்கிற்காக கட்டப்பட்ட படகோட்டப் பாதையைப் பயன்படுத்துவதே சிறந்த வழி என்றும் கூறியிருந்தது.
ஃபிட்ஸ்ராய் இன்னும் ஒரு இறுதி மதிப்பீட்டை கடக்க வேண்டும். அதில் வடிவமைப்பு, செலவின மதிப்பு மற்றும் நீண்டகால சமூக நன்மைகள் ஆகியவை பரிசீலிக்கப்படும். ஆனால் முடிவு மாகாண அரசின் கைகளில் இருப்பதால், இந்த கட்டத்தில் அது நிராகரிக்கப்பட வாய்ப்பில்லை.
இருப்பினும், ரோயிங் வசதிகளில் அதிக முதலீடு செய்ய ராக்ஹாம்ப்டன் சரியான இடமா, 2032-ல் வரவிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை அது தாங்குமா என்ற விவாதம் தொடரும்.
இந்த நகரம் கால்நடை வளர்ப்புப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாட்டிறைச்சி வாரத்தின் (பீஃப் வீக்) நிகழ்ச்சியின் போதுதான் அதிகமான விருந்தினர்களை வரவேற்கிறது.
பட மூலாதாரம், Getty Images
அப்படியானால் முதலைகள் பற்றிய கவலை என்னவாகும்?
சர்வதேச ஒலிம்பிக் குழுவும் உலக ரோயிங் அமைப்பும் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில் முதலைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கையிலும் அவை பற்றிய தகவல் இல்லை. அந்த அறிக்கையே இன்னும் பொதுமக்களுக்காக வெளியிடப்படவில்லை.
ஆனால் இந்த வார இறுதியில் நடைபெறும் பள்ளி ரெகாட்டாவுக்கான பாதுகாப்புத் திட்டத்தில் “முதலை” என்ற சொல் 28 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஃபிட்ஸ்ராய் நதி முதலைகள் வாழும் பகுதிக்குள் உள்ளது,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“எனவே முதலை காணப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதி நிகழ்வுகளைத் திட்டமிட வேண்டும். முதலைகள் வாழும் எந்த இயற்கை நீர்நிலையையும் முழுமையாக முதலை இல்லாத பகுதி என உறுதி செய்ய முடியாது.”
இந்த வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் விதிகளின்படி, ஒரு முதலையை கண்டால் போட்டிகள் உடனடியாக நிறுத்தப்படும். போட்டியாளர்கள் கரைக்கு திரும்ப வேண்டும். அதற்கான அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அழைப்பு “முதலை, முதலை, முதலை” என்பதாகும்.
முதலைகளை குறித்து குறிப்பாக கேட்டபோது நியூசிலாந்தின் விக்கம் பிபிசியிடம் கூறியதாவது, “எங்கள் முதன்மை கவலை, விளையாட்டு வீரர்களுக்கு முடிந்தவரை நியாயமான போட்டிப் பாதை கிடைப்பதை உறுதி செய்வதே. தேர்வு செய்யப்படும் எந்த இடமும் பாதுகாப்பானதாக இருப்பதாக நாங்கள் எதிர்பார்ப்பது இயல்பானதே.”
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செல்வந்தரான ஜீனா ரைன்ஹார்ட்டின் நிறுவனமான ஹான்காக் பிராஸ்பெக்டிங், ராக்ஹாம்ப்டன் முன்மொழிவை ஆதரித்தது. மேலும் ரோயிங் உட்பட பல விளையாட்டுகளில் பல கோடி டாலர்களை முதலீடு செய்துள்ள இந்த நிறுவனம், ஃபிட்ஸ்ராய் நதியில் வெள்ளம் மற்றும் முதலைகள் தொடர்பான ஆபத்துகள் குறித்து வெளியான செய்திகளை “போலியான ஊடகக் கவலைகள்” என குறிப்பிட்டது.
“பல ஆண்டுகளாக ராக்ஹாம்ப்டன் மக்கள் தங்கள் குழந்தைகளையே இந்த நதியில் பயிற்சிக்காகவும் போட்டிகளுக்காகவும் அனுப்பி வருகின்றனர். ஒரு முதலை தாக்குதல் சம்பவம் கூட நிகழ்ந்ததில்லை,” என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றின் மூலம் கூறினார்.
இந்த விவாதம் அளவுக்கு அதிகமாக பரப்பப்பட்டதாக வாதிடும் நபர்கள், பெரிய உவர்நீர் முதலைகள் நதியின் கீழ்ப்பகுதியில் வாழ்கின்றன என்றும், போட்டி நடைபெறும் பகுதியில் குறைவான ஆபத்துள்ள நன்னீர் முதலைகளே அதிகம் காணப்படலாம் என்றும் கூறுகின்றனர்.
வெள்ள அபாயமும் அரசால் மறுக்கப்படுகிறது, இருப்பினும் ‘ரோயிங் குவீன்ஸ்லாந்து’ அமைப்பின் ஓ’லாக்லின் கூறுகையில், தங்களின் பள்ளிகளுக்கான நிகழ்வு ஆகஸ்ட் 2024 இல் ஃபிட்ஸ்ராயில் நடத்தப்பட இருந்தது, ஆனால் பாதை அடித்துச் செல்லப்பட்ட பிறகு அதை மாற்ற வேண்டியிருந்தது என்று கூறுகிறார்.
எந்தவொரு விளையாட்டு அரங்குக்கும் நாங்கள் செய்வது போலவே இதற்கும் மாற்றுத் திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறோம்” என்று பிரிஸ்பேன் 2032-ன் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
சிட்னியில் உள்ள 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அரங்கம் தயாராகவும், ஒரு மாற்று ஏற்பாடாகவும் காத்திருக்கிறது – இருப்பினும் இது குயின்ஸ்லாந்து மக்களுக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும்.
இந்த வார இறுதியில் போட்டியிடும் பள்ளி வயது படகோட்ட வீரர்களுக்கு, இந்த விவாதங்கள் எதுவும் முக்கியமில்லை.
அவர்களில் சிலர் 2032 ஒலிம்பிக்கில் போட்டியிடக் கூடியவர்களாக இருக்கலாம்.
“எங்கள் மாணவர்களுக்கு ஃபிட்ஸ்ராய் என்பது முதலில் அவர்கள் சொந்த நதி,” என்று ராக்ஹாம்ப்டன் கிராமர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிலிப் மவுல்ட்ஸ் கூறினார்.
“தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போட்டியிட்ட பலரின் பயணமும் ஃபிட்ஸ்ராயிலிருந்தே தொடங்கியுள்ளது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு