பட மூலாதாரம், @GhonchehAzad
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் சாபஹார் துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதமடைந்ததை இரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
பிபிசி பாரசீக செய்தியாளர் கோஞ்சே ஹபிபிசாத், சபஹார் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜூலை 8 மற்றும் 9ஆம் தேதி இரவு, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைக்குச் சொந்தமான பார்ஸ் செய்தி நிறுவனம், சாபஹார் சுதந்திர மண்டல அமைப்பின் நிர்வாக இயக்குநர் முகமது சயீத் அர்பாபியை மேற்கோள் காட்டி, கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் கோபுரம் சேதமடைந்துள்ளது. மேலும், சாபஹார் சுதந்திர மண்டலத்தின் ஒரு கிடங்கும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்ததாக அவர் கூறினார்.
புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடந்த அமெரிக்க தாக்குதல்களில் இரானை சேர்ந்த 14 குடிமக்கள் கொல்லப்பட்டதாக இரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலடியாக குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் இரான் கூறியது. பின்னர் வியாழக்கிழமை, அரசு ஆதரவு ஊடகங்களின்படி, குவைத், ஜோர்டான், இராக் ஆகிய நாடுகளில் உள்ள பல இடங்களிலும் இரான் தாக்குதல்களை நடத்தியது.
பட மூலாதாரம், Getty Images
சாபஹார் துறைமுகம் இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 2017-18 முதல் சாபஹார் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்யத் தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு தனது மத்திய பட்ஜெட்டில் இதற்காக எந்த நிதியையும் இந்தியா ஒதுக்கவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், சாபஹார் துறைமுகத்திற்காக 400 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கியிருந்தது.
இந்தியா, இரான் இடையிலான இந்த கூட்டுத் திட்டத்திற்காக பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கப்படாதது இதுவே முதல் முறை.
அமெரிக்காவின் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலே, சாபஹார் துறைமுகத்தில் இருந்து இந்தியா தன்னை விலக்கிக் கொள்வதற்கான முக்கியக் காரணங்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளவில் இரான் பலவீனமடைந்து இருப்பதையும், சாபஹார் துறைமுகத்தில் முதலீட்டைத் தொடராமல் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாக ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.
இரான் மீதான அமெரிக்க தடைகள், பிராந்திய ஸ்திரத்தன்மையின்மை மற்றும் மாறி வரும் புவிசார் அரசியல் காரணங்களால் சாபஹார் துறைமுகத்தின் வளர்ச்சி ஏற்கெனவே மந்தமாகவே இருந்து வந்தது. ஆனால், இப்போது இதற்கான நிதியை இந்தியா ஒதுக்காததால், இந்தத் திட்டம் முழுமையாக முடங்கிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பட மூலாதாரம், Indiaportsgloballimited
சாபஹார் துறைமுகம் இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?
(இங்கு வழங்கப்படும் தகவல்கள் பிப்ரவரி 2026இல் பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.)
சாபஹாரில் ஷாகித் கலந்தாரி, ஷாகித் பெஹெஸ்தி என இரண்டு துறைமுகங்கள் உள்ளன. இது ஹோர்முஸ் நீரிணைக்கு வெளியே அமைந்துள்ளதால், பெரிய கப்பல்களுக்குப் பாதுகாப்பானதாக உள்ளது. மேலும் இது பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து வெறும் 170 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளது.
இரானின் தென்கிழக்கு சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த கடல்சார் பகுதி, நீண்ட காலமாகவே இந்தியாவின் ஒரு முக்கியமான மாற்றுப் பாதையாகக் கருதப்படுகிறது.
சாபஹார் துறைமுகம், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த வழித்தடம் மூலம் இந்தியா ஐரோப்பாவை எளிதில் சென்றடைய முடியும். அதேபோல் இரானுக்கும் ரஷ்யாவிற்கும்கூட இது பயன் தரும்.
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோதி இரான் சென்றார். 15 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் இரான் பயணம் அது.
அந்த பயணத்தின்போது, இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு உறவுக்காக, இரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்தவும் இயக்கவும் 55 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்று மோதி அறிவித்தார்.
அதன் பின்னர், புவிசார் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப சாபஹாரில் இந்தியாவின் பங்களிப்பிலும் ஆர்வத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன.
பாகிஸ்தானை தவிர்த்துவிட்டு, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய சந்தைகளை எட்டுவதற்கு வழிவகை செய்வதால், இந்தத் துறைமுகம் இந்தியாவுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
பட மூலாதாரம், AFP via Getty Images
மூலோபாய முக்கியத்துவம்
சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் மற்றும் குவாடர் துறைமுகத்திற்கு ஒரு சமநிலையாக இந்தத் துறைமுகம் பார்க்கப்படுகிறது.
மே 13, 2024 அன்று சாபஹார் துறைமுகத்தின் ஷாகித் பெஹெஸ்தி முனையத்தை பத்து ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகம், மனிதாபிமான உதவிகள் மற்றும் பிராந்தியத் தொடர்புகளைத் தக்க வைக்கவே, இந்தத் துறைமுகத்தின் ஷாகித் பெஹெஸ்தி முனையத்தை இயக்கும் பொறுப்பில் இந்தியா பங்கெடுத்தது.
இருப்பினும், 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாபஹார் துறைமுகத்தின் ஷாகித் பெஹெஸ்தி முனையத்தை இந்தியா ஏற்கெனவே இயக்கி வந்தது. 2018ஆம் ஆண்டில் சாபஹார் திட்டத்திற்கு அமெரிக்கா தடைகளில் இருந்து விலக்கு அளித்திருந்தது, ஆனால் டிரம்ப் அந்தத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார்.
டெல்லியில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின்போது, புதிய வர்த்தக வழித்தடத்தை உருவாக்குவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டபோது, இந்தத் திட்டத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்தன.
இந்தியா-ஐரோப்பா-மத்திய கிழக்கு வழித்தடம் உருவானால், சாபஹார் துறைமுகத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று கூறப்பட்டது. இது இரானை புறக்கணிக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்பட்டது.
ஆனால், 2024ஆம் ஆண்டில் இந்தியா, இரான் இடையே சாபஹார் தொடர்பாக முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தானபோது, அதன் முக்கியத்துவம் குறையவில்லை என்று கருதப்பட்டது. இப்போது மீண்டும் இந்தத் துறைமுகம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தத் துறைமுகம் வழியாக இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான டன் கோதுமையை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த முக்கியமான துறைமுகம் செயல்பாட்டு ரீதியான சவால்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா மீது அமெரிக்க அழுத்தம் என்ன உள்ளது?
கடந்த ஆண்டு செப்டம்பரில், இரானின் சாபஹார் துறைமுகத்தின் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்தது. இருப்பினும், இந்தத் தடைகளில் இருந்து இந்தியாவுக்கு ஆறு மாத கால விலக்கை அமெரிக்கா வழங்கியிருந்தது.
மத்திய பட்ஜெட்டில் சாபஹார் துறைமுகத்திற்காக இந்தியா நிதி ஒதுக்கீடு செய்யாததற்கு அமெரிக்க தடைகள் குறித்த அச்சமே ஒரு பெரிய மற்றும் மிக முக்கியமான காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச விவகாரங்கள் குறித்த நிபுணரும், மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளருமான முனைவர் முதாசிர் கமர் கூறுகையில், “சாபஹார் துறைமுகம் தொடர்பாக அமெரிக்க தடைகளில் இருந்து இந்தியா பெற்றிருந்த ஆறு மாத கால விலக்கு, அடுத்த சில மாதங்களில் முடிவுக்கு வரவுள்ளது. அமெரிக்க தடைகள் குறித்த அச்சமே இந்தியாவின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. அதனால்தான் இந்த பட்ஜெட்டில் சாபஹாருக்காக இந்தியா நிதி ஒதுக்கவில்லை” என்றார்.
சர்வதேச விவகாரங்கள் குறித்த நிபுணரான பேராசிரியர் ஃபசல்-உர்-ரஹ்மான் கானும், சாபஹார் விவகாரத்தில் இந்தியா பின்வாங்குவதற்கு இதுவே முக்கியமான காரணம் எனக் கருதுகிறார்.
பேராசிரியர் ஃபசல்-உர்-ரஹ்மான் கூறுகையில், “இந்தியாவுக்கு வழங்கப்பட்ட விலக்கை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. இந்தியா அமெரிக்காவுடனான தனது உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்காவை பகைத்துக் கொள்ளும் எந்தவொரு சமிக்ஞையையும் இந்தியா காட்ட விரும்பவில்லை” என்றார்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் பதற்றம் நிலவினாலும், அமெரிக்கா உடனான உறவுகளுக்கு இந்தியா தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாகவும், அமெரிக்காவை அதிருப்திக்கு உள்ளாக்க இந்தியா விரும்பவில்லை என்றும் பேராசிரியர் ஃபசல்-உர்-ரஹ்மான் வாதிடுகிறார்.
“இந்தியாவுக்கு அமெரிக்கா தேவை என்பதுடன் உலகின் ஒரு வல்லரசைப் பகைத்துக் கொள்ளும் அபாயத்தையும் இந்தியா தவிர்த்து வருகிறது” என்று பேராசிரியர் ஃபசல்-உர்-ரஹ்மான் கூறுகிறார்.
இருப்பினும், அமெரிக்க தடைகள் நீக்கப்பட வாய்ப்பு இருந்திருந்தால், இந்தியா நிச்சயமாக சாபஹாரில் தனது முதலீட்டைத் தொடர்ந்திருக்கும் என்று முதாசிர் கமர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா பின்வாங்குகிறதா?
இந்தியா சாபஹார் துறைமுகத்தில் இருந்து மூலோபாய ரீதியாகப் பின்வாங்குவதாக சமீபத்திய ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், சாபஹார் துறைமுகத்தின் செயல்பாடு குறித்த கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், இதற்கான செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அமெரிக்கா, இரான் ஆகிய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்தியா இந்த மாதமே அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “உங்களுக்குத் தெரிந்தபடி, அக்டோபர் 28, 2025 அன்று அமெரிக்க நிதித்துறை ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தது. அதில் ஏப்ரல் 26, 2026 வரை செல்லுபடியாகும் நிபந்தனையுடன் கூடிய தடையில்லா விலக்கு குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஏற்பாட்டை இறுதி செய்வதற்கு நாங்கள் அமெரிக்க தரப்புடன் தொடர்பில் இருக்கிறோம். இரானுடன் எங்களுக்கு நீண்ட கால உறவு உள்ளது. நாங்கள் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். மேலும் இந்த தந்திரோபாய பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்” என்று கூறியிருந்தார்.
ஆனால், இதுவரை சாபஹார் துறைமுகத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள இந்தியா, இந்த பட்ஜெட்டில் அதற்கென எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. இதற்கு அமெரிக்காவின் அழுத்தம் மட்டுமல்லாது, புவிசார் அரசியல் மாற்றங்களும் ஒரு முக்கியக் காரணமாக இருப்பதை ஆய்வாளர்கள் கவனித்து வருகின்றனர்.
பட மூலாதாரம், ATTA KENARE/AFP via Getty Images
பேராசிரியர் ஃபசல்-உர்-ரஹ்மான் கூறுகையில், “புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையால் அபாயம் அதிகரித்துள்ளது. இரான் மற்றொரு போரின் விளிம்பில் நிற்கிறது, இத்தகைய சூழலில் இரானில் எந்தவொரு பெரிய முதலீட்டையும் மேற்கொள்வது அபாயகரமானது. இரான் தொடர்பான ஸ்திரத்தன்மையின்மை தற்போது நீடிக்கிறது, எந்த நேரத்திலும் நிலைமை மோசமடையலாம். எனவே, இரானில் பெரிய முதலீடுகளைச் செய்வது அபாயகரமானது என இந்தியா கருதுகிறது” என்றார்.
முனைவர் முதாசிர் கமரரும் இதே கருத்தையே கொண்டுள்ளார். அவர் கூறுகையில், “புவிசார் அரசியல் சூழல் மற்றும் இரானில் நிலவும் ஸ்திரத்தன்மையின்மையும் ஒரு முக்கியக் காரணம். ஆனால், இந்தியா சாபஹாரில் இருந்து முற்றிலும் பின்வாங்கிவிட்டது என்று கூறிவிட முடியாது” என்றார்.
பேராசிரியர் முதாசிர் கமர் மேலும் பேசியபோது, “இந்தியா தற்போது பின்வாங்கி வருவதாகச் சொல்வது சரியாக இருக்காது. ஏனென்றால், 2016ஆம் ஆண்டு சாபஹார் துறைமுக முதலீட்டிற்காக இந்தியா-இரான் இடையே பத்து ஆண்டுகளுக்கு கையெழுத்தான ஒப்பந்தத்தை இந்தியா கிட்டத்தட்ட நிறைவு செய்துவிட்டது. அதுமட்டுமின்றி, 2024ஆம் ஆண்டிலும் சாபஹாரை இயக்குவதற்காக இந்தியா பத்து ஆண்டு கால ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இந்தியா சாபஹாரில் இருந்து முழுமையாகப் பின்வாங்காது” எனக் குறிப்பிட்டார்.
சபஹாரில் இருந்து முழுமையாகப் பின்வாங்குவதற்குப் பதிலாக, இது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு ராஜதந்திர தீர்வைக் கண்டறியும் என்று முனைவர் கமர் நம்புகிறார்.
அதுகுறித்துப் பேசிய அவர், “சாபஹார் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது, குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுக்கான தொடர்புக்கு இது அவசியம். இத்தகைய சூழலில், இந்த முக்கியமான துறைமுகத்தில் இருந்து இந்தியா சாதாரணமாகப் பின்வாங்கிவிடாது. அங்கு இந்தியா மிகப்பெரிய முதலீட்டைச் செய்துள்ளது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு