0
அமெரிக்க மத்திய அரசில் பணியாற்றும் சுமார் 8,000 அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வகையிலான புதிய நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகம் (Office of Personnel Management) இணைந்து வெளியிட்டுள்ள இந்த உத்தரவு, அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசின் கொள்கைகள் மற்றும் நிர்வாக முடிவுகளை நடைமுறைப்படுத்தத் தவறுகின்றனர் எனக் கருதப்படும் அதிகாரிகளை எந்த நேரத்திலும் பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் செயல்பாடுகளை விரைவாகவும் திறமையாகவும் முன்னெடுக்க முடியும் என நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அதிக ஊதியம் பெற்றுக்கொண்டும் அதற்கேற்ற பணித் திறனை வெளிப்படுத்தாதவர்கள், பணிச்சுமைக்கு ஒப்பிடும்போது தேவைக்கு அதிகமான பணியாளர்கள் இருப்பது மற்றும் அரசின் செலவினங்களை குறைக்கும் அவசியம் போன்ற காரணங்கள் இந்த நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
இந்த முடிவு, அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஊழியர் சங்கங்கள் மற்றும் சில அரசியல் விமர்சகர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக அரச ஊழியர்களை இலக்காகக் கொண்டு பணிநீக்கம் செய்வதற்கு இந்த உத்தரவு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
எனினும், ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கை மூலம் அரசின் செயல்திறன் உயரும் என்றும், வரிப்பணத்தைச் சேமிக்க முடியும் என்றும் வலியுறுத்துகின்றனர்.