14
இளவரசர் ஆண்ட்ரூ (மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்), தான் குத்தகைக்கு எடுத்திருந்த ராயல் லாட்ஜ் எஸ்டேட்டில் உள்ள மூன்று குடிசைகளை (cottages) உள் வாடகைக்கு விட்டதன் மூலம் வருமானம் பெற்றதை தேசிய தணிக்கை அலுவலகத்தின் (NAO) அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளில் அரச குடியிருப்புகள் குறித்து வெளிவந்துள்ள முதல் அறிக்கை இதுவாகும்.
இளவரசர் ஆண்ட்ரூ இந்த மூன்று குடிசைகளை 2026 ஏப்ரல் வரை உள்வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வருமானம் அரசாங்கத்திற்குச் செல்லும் ‘கிரவுன் எஸ்டேட்டிற்கு’ (Crown Estate) செல்லாமல், நேரடியாக ஆண்ட்ரூவிற்கே சென்றுள்ளது. இருப்பினும், இந்தத் தொகை அங்கிருக்கும் பணியாளர்களின் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட மட்டுமே போதுமானதாக இருந்ததாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரச பணிகளில் ஈடுபடாத இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களான இளவரசி யூஜினி மற்றும் இளவரசி பீட்ரைஸ் ஆகியோரின் தங்குமிடத்திற்கான வாடகையை மன்னர் சார்லஸ் செலுத்தி வருகிறார். இலண்டனில் உள்ள அரண்மனைகளில் அவர்கள் தங்குவதற்கான வாடகை, மன்னரின் தனிப்பட்ட நிதியான “பிரிவி பார்ஸ்” (privy purse) மூலம் செலுத்தப்படுகிறது.
இளவரசர் ஆண்ட்ரூ, ராயல் லாட்ஜ் குத்தகைக்காக முன்னதாகவே £7.5 மில்லியன் செலவில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டதால், அவர் மாதாந்திர வாடகை செலுத்த வேண்டிய அவசியமில்லை. அவர் தற்போது சாண்ட்ரிங்ஹாமிற்கு இடம்பெயர்ந்திருந்தாலும், ஒக்டோபர் 2026 வரை இந்த இடத்தின் குத்தகை அவரிடமே உள்ளது.
இந்த ஏற்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் அமைச்சர் நார்மன் பேக்கர், சொகுசு தங்குமிடங்களுக்கு இவ்வாறு மானியம் வழங்குவது “அராஜகமானது” என்று கூறியுள்ளார். பிரபுக்கள் சபையைச் சேர்ந்த மார்கரெட் ஹாட்ஜ், வரி செலுத்துவோரின் பணமாகக் கருதப்படும் கிரவுன் எஸ்டேட் நிதியிலிருந்து அரச பணிகளில் இல்லாதவர்களுக்கு மானியம் வழங்கப்படுவது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரண்மனை வட்டாரங்கள் கூறுகையில், இந்த இளவரசிகளுக்காகச் செலுத்தப்படும் வாடகைத் தொகையானது சந்தை விலையில் 60% ஆக உள்ளது என்றும், இது பொது நிதியிலிருந்து செலவிடப்படும் தொகையை ஈடுகட்டுவதால் வரி செலுத்துவோருக்கு கூடுதல் சுமை இல்லை என்றும் தெரிவித்துள்ளன. மேலும், இந்த அறிக்கையில் இளவரசர் ஆண்ட்ரூ எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் அல்லது தவறான செயல்களிலும் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படவில்லை.
இந்த தணிக்கை அறிக்கை வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு முயற்சி என்று பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் நாடாளுமன்றக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
