11
அவிசாவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், போலியான இலங்கை தரச்சான்று இலச்சினை மற்றும் 894 என்ற சான்றிதழ் இலக்கத்துடன் கூடிய சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அமித்திரிகல – ருவன்வெல்ல பகுதியில் அமைந்துள்ள உற்பத்தி நிலையமொன்றில் தயாரிக்கப்பட்ட குறித்த குடிநீர் போத்தல்கள், அவிசாவளை பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்களில் போலியான SLS தரச்சான்று இலச்சினையும் 894 என்ற சான்றிதழ் இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போத்தல்கள் இதுவரை சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை எனவும், சந்தைக்கு விநியோகிப்பதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சுமார் 8,500 குடிநீர் போத்தல்களுக்கும் அதிகாரிகள் முத்திரையிட்டு தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதோடு மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பவத்துக்கு பொறுப்பான தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.