படக்குறிப்பு, உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினால் உறுதியான தொகையை தேர்வு செய்வீர்களா? அல்லது அதைவிடவும் 20 மடங்கு கூடுதலை தொகைக்காக சவாலான முடிவை எடுப்பீர்களா?கட்டுரை தகவல்
எழுதியவர், லிஸி மெக்நீல் மற்றும் டாம் கோல்ஸ்
பதவி, மோர் ஆர் லெஸ், பிபிசி பாட்காஸ்ட் மற்றும் தொடர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
உங்களுக்கு உடனடியாக 50,000 டாலர் பெறுவது அல்லது 1 மில்லியன் டாலர் வெல்வதற்கான 50% வாய்ப்பு ஆகிய இரண்டு வாய்ப்புகளை வழங்கினால், நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
சமீபத்தில் யூகவ் (YouGov) என்ற சர்வதேச ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த 4,600 பேரிடம் இதுபோன்ற ஒரு கேள்வியை முன்வைத்தது.
முடிவு என்ன தெரியுமா?
கிட்டத்தட்ட நான்கில் மூன்று பேர் (73%) இப்போது 50,000 பவுண்டை எடுத்துக்கொள்வதாகக் கூறினர்.
சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே (21%) 1 மில்லியன் பவுண்டைப் பெறுவதற்கான வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தனர். மேலும் இதில் கலந்து கொண்டவர்களில் 6% பேரால் என்ன செய்வது என்று தீர்மானிக்கவே முடியவில்லை.
இதில் தெளிவான பாலின வேறுபாடு இருந்தது. பெண்களில் 82% பேர் 50,000 பவுண்டைத் தேர்ந்தெடுத்தனர், ஆண்களில் இது 63%-ஆக இருந்தது.
ஆரம்பத்தில், இந்த ஆய்வு பிரிட்டனில் மட்டுமே நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தின.
“பூமியில் ஆபத்துக்களைத் தவிர்க்க நினைக்கும் எண்ணம் அதீதமாக நிலவும் சமூகமாக பிரிட்டன் இருக்க வேண்டும்!” என்று ஒரு கருத்துரையாளர் தனது கருத்தைப் பதிவிட்டார். மற்றொருவர், “இதுதான் பிரிட்டனின் பிரச்னை!” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அது உண்மையா? பிரிட்டன் மக்கள் (அல்லது முதல் வாய்ப்பைத் தேர்வு செய்யும் நீங்கள்) காரணமின்றி ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களா?
‘பண மதிப்பு, தனிப்பட்ட மதிப்புக்குச் சமமானது அல்ல’
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பொதுவாக, ஒரே ஒரு கணிதக் கணக்கீட்டைச் செய்வதன் மூலம் நாம் நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதில்லை.
இந்தக் கருத்தை சவாலுக்கு உட்படுத்தும் நபர்களில் ஒருவர் பிபிசியின் பொருளாதார ஆசிரியர் பைசல் இஸ்லாம். இந்தக் கேள்வியை வெறும் நிகழ்தகவு சார்ந்த பிரச்னையாக மட்டும் பார்ப்பது மிகவும் குறுகிய பார்வை என்று அவர் வாதிடுகிறார்.
”நாணயத்தைச் சுண்டிப் போட்டு முடிவு செய்வதைத் தேர்வு செய்பவர்கள், தாங்கள் புத்திசாலித்தனமான முடிவை எடுப்பதாக நினைக்கிறார்கள். மேலும், உறுதியாகக் கிடைக்கும் £50,000-ஐ ஏற்றுக்கொள்வது முட்டாள்தனமானது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் முரண்பாடாக, இது பொருளாதாரத்தின் அடிப்படைப் பாடங்களில் ஒன்றுதான். நடத்தைப் பொருளாதாரத்தில் இதை ‘முடிவெடுக்கும் கோட்பாடு’ என்று அழைக்கிறோம்,” என்கிறார் அவர்
நிகழ்தகவை முடிவோடு பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படும் ‘எதிர்பார்க்கப்படும் மதிப்பு’ என்பது, உண்மையில் நமது மூளை செயல்படும் விதமோ அல்லது நாம் முடிவுகளை எடுக்கும் விதமோ அல்ல என்று அவர் கூறுகிறார்.
சுவிஸ் கணிதவியலாளர் டேனியல் பெர்னௌலி (1700-1782) கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய ஓர் அடிப்படை கோட்பாட்டை இஸ்லாம் சுட்டிக்காட்டுகிறார்.
“மக்கள் பணத்தை வெறும் கணித ரீதியாக மதிப்பீடு செய்வதில்லை,” என்பதுதான் அது.
எளிமையாகச் சொன்னால், ஒரு பொருளின் பண மதிப்பு எவ்வளவு என்பதும், அது ஒருவருக்கு எவ்வளவு முக்கியமானதாகத் தோன்றுகிறது என்பதும் எப்போதும் ஒன்றாக இருக்காது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டேனியல் பெர்னௌலியின் பழமையான ஓவியம்
குறைந்து வரும் விளிம்புநிலை பயன்பாடு என்ற கருத்தாக்கத்திற்கு அடித்தளமிட பெர்னௌலியின் பணி உதவியது. ஒருவர் ஒரு பொருளை அல்லது வளத்தை அதிகமாகப் பெறப் பெற, அதிலிருந்து கிடைக்கும் கூடுதல் பயன் அல்லது திருப்தி பொதுவாகக் குறைந்து கொண்டே இருக்கும் என்பதே இதன் பொருள்.
எடுத்துக்காட்டாக:
0 டாலரிலிருந்து 50,000 டாலருக்குகுச் செல்வது உங்கள் வாழ்க்கையை வியத்தகு முறையில் மாற்றக்கூடும்.
50,000 டாலரிலிருந்து 1,00,000 டாலருக்குச் செல்வதும் நிறைய உதவும், ஆனால், அதற்கு முன்பு ஏற்பட்ட மாற்றத்தைப் போல அதிக தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
9,50,000 டாலரிருந்து 1 மில்லியன் டாலருக்குச் செல்வது உங்கள் சூழ்நிலையில் மிகக் குறைந்த மாற்றத்தையே ஏற்படுத்தும்.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, தற்போது பல பிரிட்டன் மக்கள் எதிர்கொள்ளும் பண நெருக்கடியைக் கருத்தில் கொண்டால், உறுதியாகக் கிடைக்கும் 50,000 பவுண்ட் என்பது மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாகும்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, பிரிட்டனில் உள்ள முழுநேரப் பணியாளர்களின் சராசரி ஆண்டுச் சம்பளத்தை விட இது 10,000 பவுண்ட் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதுவே ஒரே காரணம் அல்ல. இதில் முக்கியப் பங்கு வகிக்கும் மற்றொரு கருத்து ‘எதிர்பார்ப்பு கோட்பாடு’ ஆகும்.
இழப்பு பற்றிய பயம்
எதிர்பார்ப்புக் கோட்பாடு என்பது டேனியல் கான்மேன் மற்றும் ஆமோஸ் ட்வெர்ஸ்கி ஆகியோர் 1979-ஆம் ஆண்டு வெளியிட்ட முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றிலிருந்து உருவானது.
மேலும் இது நடத்தை பொருளாதாரத்தின் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வெவ்வேறு நிதி முடிவுகளுக்கு இடையே மக்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட விரிவான கட்டுப்பாட்டு ஆய்வுகளின் அடிப்படையில், மக்கள் அபாயத்தையும் வெகுமதியையும் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பது பற்றி இவர்கள் பல முக்கியமான முடிவுகளை வழங்கினர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இக்கேள்வியின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், எது நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
அவற்றில் ஒரு கண்டுபிடிப்பு என்னவென்றால், மக்கள் சிறிய நிகழ்தகவுகளுக்கு அதிக முக்கியத்துவமும், நடுத்தர மற்றும் அதிக நிகழ்தகவுகளுக்கு மிகக் குறைந்த முக்கியத்துவமும் கொடுக்க முனைகிறார்கள்.
மக்கள் பணம் மற்றும் ஆபத்து பற்றிய முடிவுகளை ஒரு குறிப்புப் புள்ளியைப் பொறுத்தே எடுக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு நண்பருடனான பந்தயத்தில் 10 டாலரை இழந்த பிறகு, ஆரம்பத்திலிருந்தே 20 டாலரைப் பந்தயம் கட்டுவதை விட, இழந்த 10 டாலரைத் திரும்பப் பெற முயற்சிப்பதற்காக மேலும் 10 டாலரை பந்தயம் கட்ட நீங்கள் தயாராக இருக்கலாம்.
அதாவது, நீங்கள் முழுமையான அடிப்படையில் சிந்திக்கவில்லை. . உங்கள் தற்போதைய நிலையை ஒப்பிடும் ஒரு குறிப்புப் புள்ளியை அடிப்படையாகக் கொண்டே சிந்திக்கிறீர்கள்.
“ஆதாயங்களை விட இழப்புகள் பெரியதாகத் தோன்றும்,” என்பது அந்த ஆய்வின் மிகவும் பிரபலமான முடிவாக உள்ளது.
ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பதால் நாம் அனுபவிக்கும் அசௌகரியம், அதே தொகையைப் பெறுவதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அதிகமாக இருக்கிறது. மக்கள் ஏற்கெனவே தங்களிடம் உள்ளப் பொருட்களை இழப்பதைத் தவிர்க்க அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
நீங்கள் 1 மில்லியன் பவுண்ட் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து அதில் ஜெயிக்கவில்லை என்றால், நீங்கள் 50,000 பவுண்டை இழந்துவிட்டது போன்ற உணர்வே ஏற்படும்.
பிரிட்டனில் பலருக்கு, அது மிகப்பெரிய தொகை. வீடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் தவிர்த்து, சுமார் 25% மட்டுமே 50,000 பவுண்ட் அல்லது அதற்கு மேற்பட்ட நிதிச் செல்வம் உள்ளது. இதில் குறைந்த அளவு என பார்த்தால் 25% பேரிடம் 300 பவுண்டுக்கும் குறைவான நிதிச் சொத்துகளே உள்ளன.
எனினும், பொதுவாகக் குறைவாகச் சம்பாதித்தபோதிலும், 18 முதல் 24 வயதுடையவர்கள், இந்த ஆய்வின்படி, மற்ற எந்த வயதினரையும் விட 1 மில்லியன் பவுண்டுக்கான பந்தயத்தை எடுக்க அதிக விருப்பத்துடன் இருந்தனர்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11% பேர் மட்டுமே நாணயத்தைச் சுண்டிப் போட்டு முடிவெடுக்கத் தயாராக இருந்த நிலையில், இளைஞர்களில் 28% பேர் அதற்குத் தயாராக இருந்தனர்.
பாலினம் மற்றும் வயதைத் தவிர, கலாசார வேறுபாடுகளும் இதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று இணையத்தில் சிலர் தெரிவித்தனர். ஆன்லைன் விவாதத்தில் இணைந்த சில அமெரிக்கர்கள், பிற நாட்டினர் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள விரும்புவார்கள் என்று கருத்து தெரிவித்தனர். அதற்கேற்ப, சில நாட்களுக்குப் பிறகு, யூகவ் இதே கேள்வியை அமெரிக்காவிலும் கேட்டது.
ஆனால் அந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டனில் மேற்கொள்ள ஆய்வு முடிவுகளை ஒத்ததாகவே இருந்தது.
மோர் ஆர் லெஸ் என்கிற பிபிசி தொடரின் ஓர் அத்தியாயத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.