• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் வீட்டு வாடகை: வாடகைதாரர்களுக்கு நெருக்கடி எச்சரிக்கை!

Byadmin

Sep 14, 2026


இங்கிலாந்தில் 3 வருடங்களாகக் காணப்பட்ட மந்தநிலைக்குப் பின்னர் வீட்டு வாடகைக் கட்டணங்கள் மீண்டும் தீவிரமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், வாடகைதாரர்கள் மேலும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரபல சொத்து விவர இணையத்தளமான சூப்லா (Zoopla) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் புதிய வாடகை ஒப்பந்தங்களுக்கான சராசரி வாடகைக் கட்டணம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.6 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இது நாட்டின் பொதுவான பணவீக்கத்தை விடக் குறைவாக உள்ள போதிலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் தனியார் வீடுகளுக்கான வருடாந்த வாடகை அதிகரிப்பு 4 முதல் 5 சதவீதம் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் காரணமாக முதல் முறை வீடு வாங்குவோர் பலர் வாடகை வீடுகளிலேயே தொடர்ந்து தங்கியிருக்க நேரிட்டுள்ளது. இதன் காரணமாக சந்தையில் வாடகைக்குக் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன், சில பகுதிகளில் வாடகை வீடுகளுக்கான போட்டியும் தீவிரமடைந்துள்ளது.

வாடகைக்குக் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட வாடகை சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக சூப்லாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரிச்சர்ட் டொனல் தெரிவித்துள்ளார்.

முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வாடகைக்குக் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவதே வாடகைதாரர்களுக்கு கூடுதல் தெரிவுகளை வழங்குவதற்கும், நீண்ட கால அடிப்படையில் வாடகைக் கட்டணங்களை ஸ்திரமாக வைத்திருப்பதற்கும் ஒரே வழி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமாகக் கருதப்படும் ‘வாடகைதாரர்கள் உரிமைகள் சட்டம்’ மே மாத தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்தது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் வாடகை அதிகரிப்பு 1.6 வீதமாகக் குறைவடைந்திருந்த போதிலும், அதன் பின்னர் சந்தையில் வாடகைக்குக் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கை 3 வீதத்தால் சரிவடைந்துள்ளது. தற்போது வாடகைக்கு விடப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட விசாரணைகள் பதிவாகி வருவதுடன், இலண்டன் நகரில் வாடகை வீடுகளுக்கான கேள்வி மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது.

அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் கடுமையான சட்ட விதிமுறைகள் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் வாடகை வீடுகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By admin