12
நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அத்தியாவசியமற்ற இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துமாறு இங்கிலாந்து இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், வெளிநாடுகளில் நிலைநிறுத்தப்படவுள்ள அல்லது ஏற்கனவே அங்கு பணிகளில் ஈடுபட்டுள்ள படைப்பிரிவுகளுக்கான பயிற்சிகள் எவ்வித தடையுமின்றி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், உடனடியாக குறிப்பிட்ட வெளிநாட்டுப் பணிகளுக்குத் தயாராகாத மற்றும் இங்கிலாந்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரிவுகள், நிதி நெருக்கடி காரணமாக தங்களது கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு அரசாங்கம் தனது தேசிய வருமானத்தில் 2.5 சதவீதத்தை பாதுகாப்புச் செலவீனமாக அடுத்த ஆண்டுக்குள் ஒதுக்கவுள்ளதுடன், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அதனை 3 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தீவிர அழுத்தத்தையும் எதிர்நோக்கியுள்ளது.
வில்ட்ஷயரின் சாலிஸ்பரி சமவெளி மற்றும் வேல்ஸில் உள்ள சென்னிபிரிட்ஜ் போன்ற பயிற்சித் தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகள் மற்றும் பிளட்டூன் தாக்குதல் ஒத்திகைகள் உள்ளிட்ட பயிற்சிகள் இந்த இடைநிறுத்தத்திற்குள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேல்ஸில் ரோயல் டாங்க் ரெஜிமென்ட் முன்னெடுக்கவிருந்த நேரடி துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி மற்றும் டாங்கிகள் மற்றும் அப்பாச்சி ரக உலங்குவானூர்திகளை உள்ளடக்கிய மற்றொரு கூட்டுப் பயிற்சி என்பன இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த தீர்மானம் இராணுவத்தின் விருப்பத் தெரிவு அல்ல என்றும், இந்த தற்காலிக இடைநிறுத்தம் இந்த ஆண்டின் பெரும்பாலான காலப்பகுதிக்கு நீடிக்கக்கூடும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதேவேளை, இராணுவத்தை நவீனமயமாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ட்ரோன் மற்றும் எதிர்-ட்ரோன் போர்முறைகள் தொடர்பான விசேட பயிற்சிகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளன. உக்ரைன் போரிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் பயிற்சிகள் தொடர்வதாகவும், ஒவ்வொரு பயிற்சி கோரிக்கைகளும் தனித்தனியாக மீளாய்வு செய்யப்படுவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.