• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் மிகக் கடுமையான எல் நினோ: ஐ.நா. எச்சரிக்கை!

Byadmin

Sep 4, 2026


உலகளாவிய ‘எல் நினோ’ (El Niño) கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் மிகக் கடுமையானதாக உருவெடுத்துள்ளதாகவும், இது குறைந்தது 2027 பிப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.

எல் நினோ நிகழ்வானது, உலகெங்கிலும் உள்ள வானிலை முறைகளை மாற்றிமைக்கிறது.

இது சில பிராந்தியங்களில் கடுமையான வறட்சியை ஏற்படுத்துவதோடு, வேறு சில பகுதிகளில் பலத்த சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கையும் உருவாக்குகிறது.

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றத்துடன் சேர்ந்து, எல் நினோ உலகின் பல பகுதிகளில் வெப்பநிலையைக் கணிசமாக உயர்த்தும் எனப் கணிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ்,

“எல் நினோ நமது கண்முன்னே பிரம்மாண்ட வடிவம் எடுத்து வருகிறது. பூமி இதுவரை கண்டிராத ஒரு புதிய மற்றும் தீவிரமான வெப்ப அலையை நோக்கிச் செல்கிறது என்பதை அறிவியல் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

பசிபிக் பெருங்கடலில் உருவாகும் இந்த இயற்கை நிகழ்வு, காற்று வீசும் திசையில் மாற்றங்களை ஏற்படுத்தி, வெப்பமான நீர் கிழக்குப் பகுதிக்கு நகர வழிவகுக்கிறது. அண்மைய மாதங்களில் பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் வெப்பநிலை வெகுவாக உயர்ந்துள்ளது.

முக்கியக் கண்காணிப்புப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 2°Cக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதுடன், இது 4°C வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உண்மையாகும் பட்சத்தில், 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகக் கடுமையான எல் நினோ நிகழ்வாக இது பதிவாகும். மேலும், பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 8°C வரை உயர்ந்துள்ளது.

இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியக் கடலோரப் பகுதிகளிலும் இத்தகைய வழக்கத்திற்கு மாறான வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, இந்த கடல் வெப்ப அலைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கடந்த முறை தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவில் இத்தகைய வெப்ப அலை தாக்கியபோது, பென்குயின்கள் பட்டினியால் இறந்ததுடன், பெருமளவிலான மீன் இழப்புகள் மற்றும் ஜெல்லிமீன்களின் படையெடுப்புகளும் நிகழ்ந்தன.

உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களைக் குறைப்பதற்காக உலகளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சாத்தியமான தீவிர வானிலை கணிப்புகளைப் பல சமூகங்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கான பெரிய அளவிலான விழிப்புணர்வுப் பணிகளை ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு தொடங்கியுள்ளது.

By admin