0
இங்கிலாந்துக்குத் திரும்பும் வெளிநாட்டு வாக்காளர்கள், அவர்கள் வந்த முதல் ஒரு ஆண்டுக்கு அரசியல் கட்சிகளுக்கு £100,000க்கு மேல் நன்கொடை வழங்கத் தடை விதிக்க அமைச்சர்கள் புதிய திட்டங்களை அறிவித்துள்ளனர்.
இங்கிலாந்துத் தேர்தல்களில் வெளிநாட்டுப் பணத்தின் செல்வாக்கைத் தடுத்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குத் திரும்பும் தனிநபர்கள், ஒரு குறிப்பிட்ட காலம் இங்கு வசிப்பதற்கு முன்பாகவே பெரிய அளவிலான தொகையை நன்கொடையாக வழங்க முடியாது. இது ஏற்nகனவே வெளிநாடுகளில் வாழும் இங்கிலாந்துக் குடிமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள £100,000 ஆண்டு வரம்போடு கூடுதலாக அமையும்.
நிறுவனங்கள் வழங்கும் அரசியல் நன்கொடைகள், அவற்றின் வருவாயை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், கடந்த ஐந்து ஆண்டுகளின் வரிக்குப் பிந்தைய லாபத்தைக் கணக்கிட்டே மதிப்பிடப்படும். இதன்மூலம் முறையான இங்கிலாந்துத் தொடர்புள்ள வணிகங்கள் மட்டுமே நிதி வழங்க முடியும் என்பது உறுதி செய்யப்படும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் அதிகாரப்பூர்வமாக வேட்பாளராகும் முன் பெற்ற £2,230-க்கும் அதிகமான நிதிகள் முறையான ஆதாரங்களில் இருந்து வந்தவை என்பதை நிரூபிக்க வேண்டும்.
இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோகரன்சி மூலம் நன்கொடை வழங்குவது ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குறிப்பாக ‘Reform UK’ கட்சிக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை நன்கொடையாக வழங்கிய கிறிஸ்டோபர் ஹார்போர்ன் மற்றும் பென் டெலோ போன்ற பெரும் கோடீஸ்வரர்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஹார்போர்ன் கடந்த ஆண்டு ஒரே முறையில் £9 மில்லியன் தொகையை நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கம்யூனிட்டீஸ் செயலாளர் ஸ்டீவ் ரீட் கூறுகையில், “இங்கிலாந்துக்கு ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல. இந்த கடுமையான புதிய விதிகள் முறையற்ற நிதி வரவை நிறுத்தி, நமது தேர்தல்களின் நேர்மையைப் பாதுகாக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த முன்மொழிவுகள் ‘மக்களின் பிரதிநிதித்துவ மசோதாவில்’ (Representation of the People Bill) திருத்தங்களாகச் சேர்க்கப்பட்டு, ஜூலை 14 அன்று நாடாளுமன்றத்தில் மேலதிகப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. எனினும், இந்தத் திட்டம் தனது முக்கியப் போட்டியாளர்களின் சட்டபூர்வமான நிதி ஆதாரங்களை முடக்கும் முயற்சி என்று ‘Reform UK’ கட்சி விமர்சித்துள்ளது.