10
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலவிய அசாதாரண வெப்ப அலை காரணமாக சுமார் 2,700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என நிபுணர்களின் மதிப்பீட்டுள்ளனர்.
மே 21 முதல் 29 வரை சுமார் 550 பேரும், ஜூன் 18 முதல் 28 வரை சுமார் 2,200 பேரும் வெப்பம் தொடர்பான காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என இம்பீரியல் காலேஜ் இலண்டன் மற்றும் மெட் அலுவலகம் உள்ளிட்ட நிபுணர் குழுக்களின் ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது.
பெரும்பாலான உயிரிழப்புகள் ஜூன் மாத வெப்ப அலையின் போதே நிகழ்ந்துள்ளன. ஏனெனில், இது இங்கிலாந்தின் வரலாற்றிலேயே மிக வெப்பமான ஜூன் மாதமாகப் பதிவாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் நார்ஃபோக்கின் லிங்வுட் பகுதியில் வெப்பநிலை 37.7°C (99.9°F) ஆக உயர்ந்து, 1957இல் பதிவான முன்னைய சாதனையை முறியடித்தது.
மே 26 அன்று கியூ கார்டன்ஸில் வெப்பநிலை 35.1°Cஆகப் பதிவாகிப் புதிய உச்சத்தை எட்டியது. இதன் காரணமாக, ஆரோக்கியமான நபர்களுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கும் ‘சிவப்பு வெப்ப எச்சரிக்கை’ (red heat alert) விடுக்கப்பட்டது.
இந்தக் கடும் வெப்பத்திற்கு “வெப்பக் குமிழி” (heat dome) எனப்படும் ஒரு அழுத்த மண்டலமே காரணமாகும். இது பிராந்தியத்தில் வெப்பக் காற்றைச் சிறைபிடித்து வைத்திருந்தது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாகப் பூமியின் வெப்பநிலை சுமார் 1.4°C அதிகரித்துள்ளது;
இதுவே இந்த மே மற்றும் ஜூன் மாத வெப்பநிலையை மேலும் 3 முதல் 4°C வரை உயர்த்தியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
வெப்பம் உடலுக்கு அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது இதயம் வேகமாகத் துடிக்க வழிவகுத்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளை உருவாக்குகிறது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள் அதிக ஆபத்தில் இருந்தாலும், தகுதியுள்ள ஆரோக்கியமான நபர்களையும் இது பாதிக்கும் என்பதால் இது ஒரு “அமைதியான கொலையாளி” (silent killer) என்று அழைக்கப்படுகிறது.
கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் வெப்ப அலைகள் இன்னும் அடிக்கடி, தீவிரமாக மற்றும் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.